நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்திலேயே முதலமைச்சராக உயர்ந்துள்ள விஜய்யின் பலருக்கும் அரசியல் நுழைவுக்கான நம்பிக்கையை தந்துள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுடைய ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துக்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் 'வேண்டாம்' என்று சொன்னால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது சுயநலமற்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்வேன்" "ஆம் என்றால் அரசியலுக்கு தயாராக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

"நீங்கள் 'ஆம்' என்று சொன்னால், நான் அரசியலில் இறங்கத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய ஆசியுடன் இந்த அரசியல் பயணத்தை எப்போது, யாருடன் தொடங்கப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்" என தெரிவித்துள்ளார். "கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே" என்ற வாசகத்துடன் வீடியோவை தொடங்கும் ராகவா லாரன்ஸ், தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்தார். நானும் வருகிறேன் என்றேன். ஆனால் என் அம்மாவுக்கு நான் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. "உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து குழந்தைகளுக்கு நல்லது செய். அரசியலுக்கு நீ போகாதே" என்றார் என கூறியுள்ளார்.
அதன்பிறகு நண்பர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்றார். ரஜினிகாந்த் எந்த அளவுக்கு எனக்கு நெருக்கமோ, அதே அளவுக்கு விஜய்யும் எனக்கு நெருக்கமானவர். ஏனென்றால், "மேகமாய் வந்து போகிறேன்" பாடலிலிருந்து அவருக்கு நான் நடனப் பயிற்சியாளராக இருக்கிறேன். அவர் அரசியலுக்கு வருகிறார் என்று கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். தேர்தல் வந்தது. முடிவுகள் வந்தன. எல்லாமே மாறிவிட்டது. தலைகீழாக அனைத்தையும் மாற்றிவிட்டார் என கூறியுள்ளார். இப்போது தன்னுடைய அம்மா அரசியலுக்கு செல்ல அனுமதி தந்துவிட்டார் என வீடியோவில் கூறியுள்ள லாரன்ஸ் நான் தாய்க்கு நிகராக நினைக்கும் என் ரசிகர்களிடமும் கேட்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? இந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களிடமும் கேட்கிறேன். நான் அரசியலுக்கு வருவதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? என வினவியுள்ளார்.
நீங்கள் சொல்லுங்கள் "வர வேண்டாம்" என்று சொன்னால் வரமாட்டேன், "வா" என்று சொன்னால் வருகிறேன். உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் விஜய்யின் தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் திரைப்பட நடன இயக்குநராக திரையுலகில் கால் பதித்தவர். பின்னர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் ,இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து அனைத்திலுமே வெற்றி பெற்றவர். எளிமையானவர் கடவுள் பக்தி கொண்டவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் . தன்னுடைய தனித்துவமான செயல்பாடுகளால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவராக இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
தொடக்கத்தில் சினிமாவில் நடன பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு கிடைத்த சம்பளம் 1000 ரூபாய் தான் இதனை அடுத்து படிப்படியாக வளர்ந்து தற்போது 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக திகழ்கிறார். இவருடைய பெரும்பாலான வருமானம் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமும் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் இயக்குவதன் மூலமே கிடைக்கிறது.
தன் சொத்தில் பெரும்பகுதியை சமூக நலப் பணிகளுக்காக பயன்படுத்துகிறார் ராகவா லாரன்ஸ். இதற்காக ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கும் கல்வி, மருத்துவ உதவி மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறார். முதன் முதலில் அவர் குடியிருந்த வீட்டை இலவச கல்வி மையமாக மாற்றி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடன பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு தந்து அவர்களை சாதிக்க செய்தவர்.
நடிகராக, நடன இயக்குநராக, ரஜினி பக்தராக மட்டுமில்லாமல் சமூக சேவகர் என்ற முகமும் அவருக்கு இருக்கிறது. இது அவர் அரசியலில் நுழையும் போது பெருமளவில் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


