டெல்லி: முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன், பதவிக்கு வந்த பின் பலருக்கு ஆர்பிஐ ஆளுநரின் கருத்து மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அதே போல், ரகு ராம் ராஜன், தனக்கு சரி என்று பட்டதை, ஆதாரத்தோடு வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசை விமர்சிக்கும் கருத்துக்களையும் தயங்காமல் சொல்லிக் கொண்டு இருப்பவர்.
இப்போது பாரதிய ஜனதா கட்சியையும் வெளிப்படையாக விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் ப்ளூம்பெர்க் நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில், இந்தியாவின் பொருளாதாரத்தை எது தடுத்துக் கொண்டு இருக்கிறது என்று கேள்வி கேட்டார்கள்.
அதற்கு அதிகம் தயங்காமல் "அது ஒரு வருத்தமான கதை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அரசியல் தான்" எனச் சொல்லி இருக்கிறார். அதோடு "இந்தியா இப்போதும் தன் பொருளாதார மந்த நிலையைக் கடந்து வர முடியும். அதற்கு இந்தியா, தன் முக்கிய பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் ரகு ராம் ராஜன்.
மேலும் "தற்போது இருக்கும் அரசு, பெரும்பான்மை பலத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற பின், பொருளாதார விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, தங்கள் அரசியல் மற்றும் சமூக திட்டங்களைத் தான் அதிகம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது." எனச் சொல்லி இருக்கிறார். போகிற போக்கில் டீமானிட்டைசேஷன் மற்றும் ஜி எஸ் டி ஆகிய இரண்டையும் மறக்காமல் விமர்சித்து இருக்கிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நேற்று ஜிடிபி தரவுகள் வருவதற்கு முன்பே "இந்தியா தன் நிதித் துறையைச் சுத்தம் செய்ய போதுமான கவனம் கொடுக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்த நிதித் துறை தான் இந்தியாவின் மந்த நிலையை முன்னெடுத்துச் சென்று கொண்டு இருக்கின்றன" எனவும் சொல்லி இருக்கிறார்.
அப்படியே கொரோனா வைரஸின் பாதிப்பும் உலக பொருளாதாரத்தில் இருக்கும் எனவும் சொல்லி நம்மை எல்லாம் எச்சரித்து இருக்கிறார் முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகு ராம் ராஜன்.