ஹாங்காங்: முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பதவிக்கு வந்த பின் தான், பலருக்கு ஆர்பிஐ ஆளுநர் பதவியின் முக்கியத்துவம் புரிய வந்தது.
அதோடு அவரின் கருத்து மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அதே போல், ரகு ராம் ராஜன், தனக்கு சரி என்று பட்டதை, வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசை விமர்சிக்கும் கருத்துக்களையும் தயங்காமல் சொல்லிக் கொண்டு இருப்பவர். இப்போது அரசுகளுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.
கொரோனா வைரஸ்
கடந்த சில மாதங்களாக அதிகம் பரவி வரும் கொரோனா, தற்போது ஒட்டு மொத்த உலகத்தையும் பயப்பட வைத்திருக்கிறது. அமெரிக்கா கூட இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என அதிபர் ட்ரம்பே ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த வைரஸால் உலக பொருளாதாரத்தோடு பல நாட்டு பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் சரிந்து கொண்டு இருக்கின்றன.
அமெரிக்கா & ஐரோப்பா சந்தைகள்
நேற்று (மார்ச் 06, 2020) அமெரிக்காவின் நாஸ்டாக் 1.87 % சரிந்து இருக்கிறது. அதே போல லண்டனின் எஃப் டி எஸ் இ 3.62 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 4.14 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.37 % சரிவு என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் எல்லாமே சரிந்து இருக்கின்றன. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.
ஆசிய சந்தைகள் இன்று
நேற்று மார்ச் 06, 2020, ஆசியாவில் அனைத்து சந்தைகளும் சரிவில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி இண்டெக்ஸ் 2.72 % சரிந்து இருக்கிறது. குறைந்து அளவு சரிவு கண்டு இருக்கும் சந்தை என்றால், அது சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தான். சீன சந்தை 1.21 % சரிந்து இருக்கிறது. இந்த பொருளாதார சரிவுகளுக்கு எல்லாம் ஆலோசனை சொல்லும் விதத்தில் ரகு ராம் ராஜன் சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்.
உலக நாடுகளில்
இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு விஷயத்தில், நாட்டின் மத்திய வங்கிகள் அதிகம் எதையும் செய்ய முடியாது. அரசு நிறைய செலவழித்தால் உதவியாக இருக்கலாம். இந்த கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என மக்களுக்கும், கம்பெனிகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்போதைக்கு, இது தான் எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விஷயம்.
நம்பிக்கை
"இந்த கொரோனா வைரஸ் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பரவாது, பரவலைக் கட்டுப்படுத்திவிட்டார்கள் அல்லது இந்த கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடித்துவிட்டார்கள் என மக்கள் உணர விரும்புகிறார்கள்" என ப்ளூம்பெர்க் நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
வைரஸ் பர்ஸ்ட்
மேலும் பேசிய ரகு ராம் ராஜன் "என்னைப் பொறுத்த வரை, இந்த நேரத்தில், அரசுகள், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து கவலைப்படுவதற்கு பதிலாக, இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துக் கொள்ளலாம்" எனச் சொல்லி இருக்கிறார்.