டெல்லி: இந்தியாவில் வெகுவேகமாக பரவி வரும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தினை தடுக்க, அரசு பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலையை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக, 250 ரயில் நிலையங்களில் அதிகரித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், பிளாட்பார்ம் டிக்கெட் விலைகளை உயர்த்த மண்டல ரயில்வே முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு
இதன் படி நாட்டின் பல பகுதிகளில் உள்ள 250 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலையை 5 மடங்கு உயர்த்தி 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை, வதோத்ரா, அகமதாபாத், ரத்லம், ராஜ்காட், பாவ்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் பிளாட்பார்ம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு கூடுதல் சுமையைத் தரும். இதனால் மக்கள் அதிகளவில் ரயில்வே பிளாட்பார்ம்களில் கூடுவதை தவிர்ப்பார்கள். இது ஒரு தற்காலிக நடவடிக்கை தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் தான் உயர்வு
ஏனெனில் கோடைகாலம் நெருங்கி வருவதால் பெரும்பாலான பயணிகள் பல பயணிகள் ரயில் நிலையத்திற்கு வருவார்கள். அவர்களை வழியனுப்ப பலர் வருவர். இந்த நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்க்க இப்படி ஒரு நடவடிக்கையினை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனிமைபடுத்த கோரிக்கை
அதிலும் நாட்டில் தற்போது கொரோனாவின் தாக்கம் 126 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறியுள்ள பயணி டெல்லி - புவனேஸ்வர் ராஜதானி எக்ஸ்பிரஸில் வந்துள்ளனர். இந்த நிலையில் மூன்று ரயில்வே ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்த கோரியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பலருக்கும் தாக்கம் இருக்கலாம்
ஒடிசாவில் கொரோனா தாக்கம் உள்ள ஒரு பயணி ரயிலில் பயணம் செய்து மார்ச் 11 அன்று டெல்லி வந்த போது, குறைந்தது 129 பேருடன் தொடர்பு கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று இப்படி பலருக்கும் பரவ வாய்ப்புள்ளதால், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்கவே இப்படி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது ரயில்வே நிர்வாகம்.