இந்தியா. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இந்திய மக்கள் அன்றாடம் வேலைக்குச் செல்வது தொடங்கி, விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வது வரை, எல்லாவற்றுக்கும் போக்குவரத்து சேவைகள் அவசியமாகிறது.
இந்தியாவின் இந்த போக்குவரத்துப் பிரச்சனையை தீர்க்கும் இடத்தில், ஏழைகளின் நண்பனாக இருக்கும் அமைப்பு தான் இந்தியன் ரயில்வேஸ்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழைகள், மிகக் குறைந்த விலையில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும். இப்போது இந்த ரயில்வேஸிலும் தனியார் நிறுவனங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.
2020 பட்ஜெட்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில், 100-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க இருப்பதாகச் சொன்னார். இந்த 100 வழித்தடங்களும் 10 - 12 க்ளஸ்டர்களாக பிரிக்கப்படும். மும்பை - டெல்லி, சென்னை - டெல்லி, டெல்லி - ஹெளரா, டெல்லி - பாட்னா போன்ற வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயங்கலாம் என லைவ் மிண்ட் சொல்லி இருந்தது.
ரயில்வேஸில் தனியார் முதலீடுகள்
இந்தியாவின் ரயில்வே துறையை மேம்படுத்தவும், பேசஞ்சர் ரயில்களை இயக்கவும், மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. Alstom SA, Bombardier Inc., GMR Infrastructure Ltd, Adani Enterprises Ltd, Tata Realty and Infrastructure, Hitachi India போன்ற கம்பெனிகள் முன் வந்தது நினைவு இருக்கலாம்.
7.5 பில்லியன் டாலர் முதலீடு
தனியார் கம்பெனிகள், ரயில்களை இயக்கும் இந்த திட்டங்களினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சுமாராக 7.5 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடுகள் குவியும் என மத்திய ரயில்வே அமைச்சகம் (Ministry of Railways) மதிப்பீடு செய்து இருக்கிறது. முதலீட்டுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து, வழித்தடங்கள் வரைச் சொன்ன அரசு, நேற்று ரயில்வே கட்டணம் தொடர்பாகவும் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லி இருக்கிறது.
தனியார் கட்டணம் நிர்ணயிக்கலாம்
ரயில்களை இயக்கும் தனியார் கம்பெனிகள், தங்கள் ரயில்களின் கட்டணங்களை, அவர்களே நிர்ணயிக்க சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என இந்திய ரயில்வே போர்டின் (Indian Railway Board) தலைவர் வி கே யாதவ், நேற்று (17 செப்டம்பர் 2020, வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார்.
அரசின் கவனத்துக்கு
அரசு மட்டுமே ஒட்டு மொத்த மக்கள் பணிகளையும் செய்வது இன்றைய தேதிக்கு சாத்தியமில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் எல்லாமே தனியார் கம்பெனிகள் கைக்குச் செல்வது வெகுஜன மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழை எளிய மக்கள் அவதிப்படாதவாறு, தனியார் ரயில்களை இயக்கினால் எல்லோருக்குமே மகிழ்ச்சி தான். இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படும் என எதிர்பார்ப்போம்.