இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வரும் நிலையில், அதன் பதற்றமும் மக்களை தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
மேலும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
இது தவிர கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்கும் படி, தமிழக அரசும் மத்திய அரசும் மாறி மாறி வலியுறுத்தி வருகின்றன.
ரயில்கள் ரத்து
இதனால் மக்கள் பலர் தாங்கள் திட்டமிட்ட பயணங்களை கூட ரத்து செய்து வருகின்றனர். அதோடு புதியதாக பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் பதிவும் செய்வதையும் தள்ளி வைத்து வருகின்றனர். இதனால் ரயில்களில் போதுமான முன்பதிவு இல்லை. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு 155 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
அபராத கட்டணம் ரத்து
மேலும் முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்தால், அதற்கு அபராதம் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முழு பணமும் திருப்பி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மக்களை ஊக்குவிக்கும் விதமாக, முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்யும் போது, வசூலிக்கப்படும் கட்டணத்தினையும் ரத்து செய்துள்ளது.
அரசு பரிந்துரை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் கூட்டமாக எங்கேயும் செல்ல வேண்டாம். மேலும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூட்டமாக கூடும் பல இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கூடவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் பயணங்களை தவிர்த்து, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
எதற்காக ரயில்கள் ரத்து?
இதன் காரணமாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் அந்த டிக்கெட்களை ரத்து செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான முன்பதிவு டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை முதல் 155 ரயில்கள் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
எந்தெந்த ரயில் ரத்து?
இந்த நிலையில் மத்திய ரயில்வே 23 ரயில்களையும், தென்னக மத்திய ரயில்வே 29 ரயில்களையும், மேற்கு ரயில்வே 10 ரயில்களையும், தென் கிழக்கு ரயில்வே 9 ரயில்களையும் ரத்து செய்துள்ளது. கிழக்கு கடற்கரை மற்றூம் வடக்கு ரயில்வே தலா 5 ரயில்களையும் ரத்து செய்துள்ளன. இதே வடமேற்கு ரயில்வே 4 ரயில்களையும் ரத்து செய்துள்ளது.
பிளாட்பார்ம் கட்டணமும் அதிகரிப்பு
அதிகளவில் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களில் மிக நீண்டதூரம் செல்லும் ரயில்கள் ஆகும். முன்னதாக ரயில்வே பிளாட்பார்ம்களின் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க, பிளாட்பார்ம் டிக்கெட் விலை 5 மடங்கு அதிகரிக்கப்பட்டு, 10 லிருந்து, 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டது.
சுத்தமாக இருக்க வேண்டும்
மேலும் இது தவிர உணவு உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களும் தினசரி அடிப்படையில் தங்கள் சீருடைகளை மாற்ற வேண்டும், கடமையின் போது சுத்தமான சீருடை அணிய வேண்டும். சரியான தூய்மையை பராமரித்தல், அடிக்கடி தொட்ட பொருள்கள் மற்றும் பில்லிங் இயந்திரம், பிஓஎஸ் இயந்திரம், காபி இயந்திரங்கள், கவுண்டர் டாப், கதவு கைப்பிடிகள், அட்டவணை, நாற்காலி குளிர்சாதன பெட்டி கைப்பிடிகள், என பல இடங்கள் கிருமி நாசினிகள் பயன்படுத்து சுத்தப்படுத்துதல், டெட்டால், கோலின் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பரிந்துரை
அதே போல கேட்டரிங்க் பிரிவுகளிலும் கை சோப்பு மற்றும் சானிடைசர்கள் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதே போல தினசரி அடிப்படையில் அனைத்து கேட்டரிங்க் பிரிவுகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் உணவு பொருட்கள் பேக்கேஜிங் சரியாக செய்யட வேண்டும். தளர்வான பொருட்களின் பயன்பாட்டினை முடிந்தமட்டிலும் தவிர்க்கப்பட வேண்டும். இப்படியாக பல அடுக்கு பாதுக்காப்புகளைக் கடை பிடிக்க ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.