பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான் போர் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிவிட்டது, கோடிக்கணக்கான மக்களை எரிபொருள் தட்டுப்பாட்டில் தள்ளி இருக்கிறது. இந்த போர் முடிவுக்கு வந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்பதே கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு.
தற்போதைக்கு ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதால் எந்தவித தாக்குதல்களும் நடத்தப்படாமல் இருக்கின்றன. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால் சரக்கு போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருந்தாலும் உலகமே எதிர்பார்க்கக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனையில் தீர்வு கிடைக்கவில்லை.

பாகிஸ்தான், எகிப்து,துருக்கி, சீனா ஆகிய நாடுகள் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட அமைதி பேச்சு வார்த்தையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. இரண்டாவதாக பேச்சுவார்த்தை நடக்குமா இல்லையா என்பதே தெரியவரவில்லை. இந்த சூழலில் தான் மேற்காசியா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா பங்காற்றுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பாகிஸ்தான் தரப்பில் முன்னெடுக்கபப்ட்ட முயற்சியில் நம்பிக்கை இல்லை என ஈரான் தரப்பு தயக்கம் காட்டுகிறது. இந்நிலையில் தான் இந்தியா ஏன் இதில் தலையிட்டு அமைதியை நிலை நாட்ட கூடாது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் பதில் அளித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் மேற்காசிய பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா பங்காற்றுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் அதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார். அதற்கான சமயம் வரும்போது இந்தியா தன்னுடைய வேலையை சரியாக செய்யும் அதில் வெற்றியும் பெறும் என சூசகமாக பதில் தந்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இரு தரப்பினரிடம் பேசி இருக்கிறார் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இது போன்ற ராஜாங்க ரீதியிலான விஷயங்களில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சமநிலையான அணுகுமுறையை தான் பின்பற்றுவார் என தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் நீட்டித்துள்ளார். ஈரான் தரப்பில் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கும் வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஈரான் தலைமை தற்போது மோசமான பாதிப்பை சந்தித்து இருப்பதாக கூறும் அவர் தற்போதைய சூழலில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து ஒரு உடன்பாட்டுக்கான ஒரு முன்மொழிவை பரிந்துரை செய்வதற்கு கால அவகாசம் தருகிறேன் அதுவரை போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். ஈரான் தரப்போ ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications

