மும்பை பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பிக் புல் என அழைக்கப்படும் ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா ஜோடி வெறும் 1400 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா
இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் கொண்ட தனிநபர் முதலீட்டாளராக இருக்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தனது மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா உடன் இணைந்து பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாகியுள்ளார்.
1400 கோடி ரூபாய் நஷ்டம்
இந்நிலையில் மே மாதத்தில் மட்டும் ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா முதலீடு செய்துள்ள பல நூறு நிறுவனங்களில் அதிகப்படியான முதலீட்டை பெற்றுள்ள 3 நிறுவனங்களின் வாயிலாக மட்டும் சுமார் 1400 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
டைட்டன் - 996 கோடி ரூபாய் இழப்பு
மார்ச் 31ஆம் தேதி நிலவரத்தின் படி ரேகா ஜூன்ஜூன்வாலா டைட்டன் நிறுவனத்தில் சுமார் 5.05 சதவீத பங்குகளை வைத்துள்ளார். திங்கட்கிழமை கணக்கின் படி இந்த 5.05 சதவீத டைட்டன் பங்குகள் மதிப்பு 10,028.96 கோடி ரூபாய், ஏப்ரல் மாதத்தில் இதன் மதிப்பு 11,025 கோடி ரூபாயாக இருந்தது. இந்தச் சரிவின் மூலம் ரேகா ஜூன்ஜூன்வாலா-வுக்கு டைட்டன் மூலம் 996 கோடி ரூபாய் இழப்பு.
ஸ்டார் ஹெல்த் - 381 கோடி ரூபாய் இழப்பு
இதேபோல் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைய்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 17.51 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இந்த நிறுவனத்தின் சந்தை முதலீட்டின் மதிப்பு 7,164.54 கோடி ரூபாயில் இருந்து 6,789.62 ரூபாயாகச் சரிந்துள்ளது. இதன் மூலம் 381 கோடி ரூபாய் இழப்பு.
மெட்ரோ பிராண்ட்ஸ் - 47 கோடி ரூபாய் இழப்பு
இதேபோல் ரேகா ஜூன்ஜூன்வாலா மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தில் 14.43 சதவீத பங்குகளை வைத்துள்ளார். கடந்த 30 நாட்களில் 2238.26 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு 2,191.64 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதன் மூலம் 47 கோடி ரூபாய் இழப்பு.
பங்குச்சந்தை
இப்படி ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா முதலீடு செய்துள்ள டாப் 3 நிறுவனங்களில் அதாவது டைட்டன், ஸ்டார் ஹெல்த், மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் வாயிலாக 1400 கோடி ரூபாய் அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளனர். ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா போன்ற பெரும் தலைகளுக்கே இந்த நிலைமை என்றால் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் நிலைமை என்ன..?