இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வரும், மிகப்பெரிய முதலீட்டாளர்.
இவர் வாங்கும் பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்களும் உண்டு. ஏனெனில் இவரின் போர்ட்போலியோவில் ஒரு பங்கு இருக்கின்றது எனில், அந்த பங்கு நிச்சயம் லாபம் காணும் என்ற அளவுக்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்த நிலையில் கடந்த 4 அமர்வுகளில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலம் 375 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது உண்மையா? எப்படி சாத்தியம் வாருங்கள் பார்க்கலாம்.
4வது நாளாக தொடர் ஏற்றம்
தொடர்ச்சியாக சந்தையில் நிலவி வரும் தேவைக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலையானது, 4வது அமர்வாக ஏற்றம் கண்டு வருகின்றது. குறிப்பாக கிட்டதட்ட 30% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய தூண்டுதலாக மார்கன் ஸ்டான்லி டாடா மோட்டார்ஸின் இலக்கு விலையை 298 ரூபாயில் இருந்து 448 ரூபாயாக உயர்த்தியதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது கிட்டதட்ட அதன் இலக்கு விலைக்கு அருகில் தான் உள்ளது.
இன்றைய பங்கு நிலவரம்
சொல்லப்போனால் டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது இன்று 1.23% அதிகரித்து, 420.85 ரூபாயாக தற்போது வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 435.70 ரூபாயாகும். இக்து தான் இந்த நிறுவனத்தின் 52 வார உச்சமாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது 413.60 ரூபாயாகும்.
தேவை அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸின் மிக விலையுயர்ந்த சொகுசு காரான ஜாகுவார் லேண்ட் ரோவருக்கு, சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதன் தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதன் இந்தியா வணிகமும் எதிர்பார்ப்பினை விட நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
விழாக்கால பருவத்தில் தேவை அதிகரிக்கலாம்
ஆக மேற்கண்ட பல காரணிகளுக்கு மத்தியில் டாடாவின் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் விழாக்கால பருவத்திலும் தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிறுவனம் தற்போது மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இது வரும் காலத்திலும் நிறுவனத்தின் வருவாயினை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரக கார்கள் அறிமுகம்
கடந்த சில ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல புதிய ரக கார்களை அறிமுகம் செய்துள்ளது. இது பார்ப்பதற்கு அழகானதாக மட்டும் அல்லாமல், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களாகவும் உள்ளன. இந்த நிலையில் தான் இந்த பங்கு விலையானது தொடர்ச்சியான ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு வருமானம்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வசம் தற்போது 37,750,000 ஈக்விட்டி பங்குகள் அல்லது 1.1% பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு 1643.63 கோடி ரூபாயாகும். இதன் மூலம் கடந்த 4 அமர்வுகளாவில் சுமார் 375 கோடி ரூபாயினை ராகேஷ் லாபம் கண்டுள்ளார்.