இந்திய பங்கு சந்தையின் தந்தை, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் பேர் போனவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது முதலீட்டினை பெருமளவில் செய்துள்ளார்.
சமீபத்தியில் இவர் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனத்தினையும் தொடங்கினார்.
இந்தியாவின் வாரன் பப்பெட்
இந்தியாவின் வாரன் பப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்தவ்ர் தான் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
பங்கு சந்தை முதலீட்டாளர்
பங்கு சந்தை என்றாலே பதறியடுத்து பலர் ஒடும் காலத்தில், அதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து வெற்றிகரமாக ஜெயித்தவர். மிகக் குறைந்த முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வந்தவர் தான் இந்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா. இதனால் தானோ என்னவோ? இவர் இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
பட்டய கணக்காளர்
மும்பையில் பணியாற்றி வந்த வருமான வரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ், 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதியில் பிறந்தவர். இவர் பட்டய கணக்காளர்.
போர்ட்போலியோ முதலீடுகள்
ஆரம்பத்தில் இவர் மிகச் சிறிய அளவில் டாடா டீ, சேஷ கோவா உள்ளிட்ட சில நிறுவனங்களில் முதலீடு செய்தார். அதில் நல்ல லாபத்தையும் பார்த்தார். அந்த லாபத்தையும் திரும்ப பங்குசந்தையிலேயே முதலீடு செய்தார். இவரது முதலீட்டிலேயே மிகவும் லாபகரமான முதலீடு என்பது டைட்டன் நிறுவனப் பங்கில் செய்த முதலீடு தான். கடந்த 2002 - 2003 காலகட்டத்தில் அந்த நிறுவனப் பங்குகள், ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், இன்று அது ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது.
உடல் நல பிரச்சனை
பில்லியரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை 6.45 மணிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துமதிப்பு
ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. அண்மையில், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்க விழாவில் வீல்சேரில் வந்த ராகேஷ் ஜுன் ஜுன் வாலா வந்திருந்தார்.