பொதுவாக பங்கு சந்தையில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலையானது, சிறிய விஷயங்களால் கூட பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை காணலாம்.
சில நேரங்களில் அவை என்ன என தெரிந்து கொள்வதற்கு முன்பே இந்த ஏற்ற இறக்கமானது இருக்கும். ஆக நீங்கள் ஒரு பங்கினை வைத்திருக்கீர்கள் எனில், அதனை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அப்போது தான் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றித் தான்.
தற்போதைய பங்கு சந்தை நிலவரம்?
தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 327.61 புள்ளிகள் குறைந்து, 59,680.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 120.25 புள்ளிகள் குறைந்து, 17,778.40 புள்ளிகளாக காணப்படுகின்றது. முன்னதாக சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரையில் சரிந்த நிலையில், தற்போது சற்று மீண்டு வந்துள்ளது.
எஸ்கார்ட்ஸ் பங்கு நிலவரம்
எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது, என்.எஸ்.இ-யில் 10.89% அதிகரித்து, 1808.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இதே பி.எஸ்.இ-யில் பங்கு விலையானது தற்போது 10.79% அதிகரித்து, 1806 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இதன் 52 வார உச்ச விலையானது 1825 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலை 1,100.10 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலையானது 1825 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலை 1,612.30 ரூபாயாகவும் உள்ளது.
ஒப்பந்தத்தினை எட்டியுள்ளது?
ஜப்பானின் குபோடா நிறுவனம், இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனமான எஸ்கார்ட்ஸில் பங்குகளை அதிகரிப்பதாக அறிவித்ததையடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரித்துள்ளது.
குபோடா மற்றும் எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தினை எட்டியுள்ளது.
எவ்வளவு பங்கு?
எஸ்கார்ட்ஸ் நிறுவனம் 10 ரூபாய் முகமதிப்புள்ள 93,63,726 பங்குகளை, ஒரு பங்குக்கு 2,000 ரூபாய் என்ற விலையில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தற்போதுள்ள எஸ்கார்ட்ஸ் புரோமோட்டர்களுடன் இணைந்து, குபோடாவும் ஒரு புரோமோட்டராக மாறும்.
பங்கினை அதிகரிக்கலாம்
செப்டம்பர் 2021 நிலவரப்படி, குபோடா கார்ப்பரேஷன் 9.09% பங்குகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய பங்கு விற்பனைக்கு பிறகு 14.99% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய புரோமோட்டர்கள் குழு, எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் எந்த பங்கினையும் விற்கவில்லை என எஸ்கார்ட்ஸ் தெரிவித்துள்ளது.
டிராக்டர் சந்தை வளர்ச்சி
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் டிராக்டர் சந்தையானது மேம்பட்டு வரும் நிலையில், எஸ்கார்ட்ஸில் குபோடா பங்கினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டமானது இரு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுறவை வலுப்படுத்த உதவும் என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்
செப்டம்பர் 2021 நிலவரப்படி, எஸ்கார்ட்ஸில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் 4.75% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக இந்த ஏற்றமானது நிச்சயம் நல்ல லாபகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.