இந்தியாவின் பணக்கார பங்கு முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஞாயிற்றுக்கிழமை மறைந்தார், இது அவரைப் பின்பற்றிப் பங்குச்சந்தை முதலீட்டுக்குள் வந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரது மறைவிலும் முதலீட்டாளர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.
கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் சுற்றி வரும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, தனது இறப்பை முன்பே கணித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இறப்பதற்கு முன்பே பல வருடங்களாக முதலீடு செய்து சேர்த்து வைத்துள்ள பங்குகள் மற்றும் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் அளிக்கவும் முதலீடுகளை உரிய முறையில் நிர்வாகம் உறுதிசெய்ய முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் மொத்த சொத்து மதிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் உள்ள நேரடி முதலீடுகள் மற்றும் அசையா சொத்துக்களை - தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் நேரடி கட்டுப்பாட்டிற்கு விட்டுச் சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாகிகள் குழு
மேலும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா குடும்பத்தின் மொத்த சொத்துக்களைத் தொழில் வல்லுநர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும் கட்டமைப்பையும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தனது மறைவிற்கு முன்பே உருவாக்கியுள்ளார்.
5,000 ரூபாய் டூ 29,700 கோடி ரூபாய்
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 1985 ஆம் ஆண்டின் மத்தியில் வெறும் 5,000 ரூபாய் உடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நுழைந்தார். ஆகஸ்ட் 12 நிலவரப்படி அவரது பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு மட்டும் சுமார் 29,700 கோடி ரூபாயாக உள்ளது. இதில் டைட்டன் நிறுவனம் தான் அதிக மதிப்புடையது.
ரேர் எண்டர்பிரைசஸ்
ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் முதலீட்டு அமைப்பான ரேர் எண்டர்பிரைசஸ் (Rare Enterprises) - அவர் மற்றும் அவரது மனைவி ரேகாவின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்த ரேர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைத் தற்போது நிர்வாகம் செய்யும் உத்பல் ஷெத் மற்றும் அமித் கோலா தலைமையிலான நிர்வாகக் குழுவால் தொடர்ந்து நடத்தப்படும்.
முன்கூட்டியே முடிவு
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் மோசமான உடல்நலம் மற்றும் பிற நிர்வாகப் பிரச்சனைகள் காரணமாக முதலீட்டின் மூலம் கிடைத்த பெரும்பாலான நிறுவனங்களின் நிர்வாகக் குழு பதவிகளைக் கடந்த ஆண்டில் இருந்து அதிகளவில் துறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் தனது மரணத்தை அடிப்படையாக வைத்து ராகேஷ் ஜூன்ஜூன்வாலா முன்கூட்டியே எடுத்த முடிவாகப் பார்க்கப்படுகிறது.
சொத்துக்கள், வீடு,
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா முதலீட்டு சந்தையிலும், நிறுவனங்களின் முக்கியப் பதவிகளில் சுமார் 25 வருடமாக உச்சாணிக் கொம்பில் இருந்த காரணத்தால் ஒருவரின் மரணம் எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொண்டே, தனது மறைவிற்கு முன்பே முதலீட்டுச் சொத்துக்கள், வீடு, முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக முடிவுகள் என அனைத்தையும் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் அவரது விருப்பம் போல் அவரது குடும்பத்தைச் சென்றடையும் வகையில் திட்டமிட்டு உள்ளார்.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா குடும்பம்
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் ரேகா ஜூன்ஜூன்வாலா-வுக்கு 3 பிள்ளைகள், 18 வயதான நிஷ்தா, டிவின்ஸ் மகன்களான 13 வயதான ஆர்யமான் மற்றும் ஆர்யவீர். ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பிள்ளைகள் போதிய வயதும் அனுபவமும் இல்லாத நிலையில் சொத்துக்களை நேரடியாக நிர்வாகம் செய்ய ரேகா ஜூன்ஜூன்வாலா மட்டுமே உள்ளார்.
Rare Enterprises நிர்வாகம்
இதனாலேயே Rare Enterprises தற்போது நிர்வாகம் செய்யும் உத்பல் ஷெத் மற்றும் அமித் கோலா தலைமையிலான நிர்வாகக் குழுவால் தொடர்ந்து நடத்தப்படும் வகையில் முடிவை எடுத்துள்ளார்.