ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தியாவின் தொழில் துறைக்கு பேரிடியாக பிரபல தொழிலதிபர் மற்றும் பங்கு வர்த்தக நிபுணர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா காலமானார் என்ற செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி முதல் அனைத்து அமைச்சர்களும், தொழிலதிபர்களும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கடைசி நிகழ்ச்சியாக தனது ஆகாசா ஏர் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா
ஆகாச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஆகஸ்ட் 7ஆம் தேதி மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான முதல் விமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி தான் அவரது கடைசி நிகழ்ச்சி என்பது அப்போது யாருக்கும் தெரியாதது பெரும் துரதிஷ்டமாகும்.
12 மாதங்களில் குழந்தை
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, 'பொதுவாக ஒன்பது அல்லது பத்து மாதங்களில் தான் ஒரு குழந்தை பிறக்கும். ஆனால் நாங்கள் ஆகாசா ஏர் என்ற குழந்தையை 12 மாதங்களில் பெற்றெடுத்தோம் என்று 12 மாதங்களில் ஆகாசா ஏர் தொடங்கப்பட்டது குறித்து கூறியுள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்க சாத்தியமே இல்லை என்று அவர் மும்பை விமான நிலையத்தில் நடந்த ஆகாசா ஏர் தொடக்க விழாவில் உரையாற்றினார். உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் 12 மாதங்களில் உருவாக்கப்படவில்லை என்பதையும் தனது உரையில் அவர் கோடிட்டு காட்டி இருந்தார்.
அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா
மும்பை விமான நிலையத்தில் ஆகாசா நிறுவனத்தின் முதல் விமானம் தொடங்கப்பட்டதை அடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல் விமானத்தை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முதல் விமானத்தில் பயணம்
ஆகாசா ஏர் தொடக்கவிழாவில் தனது உரையை வழங்கிய பின்னர் அமைச்சர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தன்னுடைய நிறுவனத்தின் முதல் விமானத்தில் பயணம் செய்தார்.
புதிய போட்டியாளர்
இந்தியாவை பொருத்தவரை விமான நிறுவனங்கள் நடத்துவது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான ஒன்று என்பதும், போட்டிகள் அதிகம் உள்ள துறை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது மீண்டும் விமான நிறுவனங்கள் உற்சாகத்திற்கு வந்துள்ள நிலையில் புதிய போட்டியாளராக ஆகாச ஏர் இந்தியாவில் நுழைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த கட்டணம்
ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் ஒரே நோக்கம் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு அதிக வசதி செய்து கொடுப்பது என்பதுதான் என்றும், இதனால்தான் ஆகாசா ஏர் தொடங்கிய ஒரு சில நாட்களில் பயணிகள் மத்தியில் பிரபலமாகி உள்ளது என்றும் ஆகாசா ஏர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை - மும்பை
தற்போது மும்பை - அகமதாபாத் மற்றும் பெங்களூர் - கொச்சி ஆகிய வழித்தடங்களில் ஆகாசா ஏர் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. மேலும் பெங்களூர் - மும்பை வழித்தடத்தில் ஆகஸ்ட் 19ம் தேதியும், சென்னை - மும்பை வழித்தடத்தில் செப்டம்பர் 15ஆம் தேதியும் ஆகாசா ஏர் நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications