பங்கு சந்தை என்றாலே பதறியடுத்து பலர் ஒடும் காலத்தில், அதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து மிகக் குறைந்த முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வந்தவர் தான் இந்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா. இதனால் தானே என்னவோ? இவர் இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
அதுமட்டும் அல்ல, இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர்.
ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் தான் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வளர்ச்சி பாதையில் டைட்டன்
இந்த நிலையில் இவருடைய விருப்பமான பங்கான டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலையானது, ஆல் டைம் ஹையை தொட்டுள்ளது. இது மூன்றாவது காலாண்டில் அதன் வணிகம் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது, இதனால் முழு வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு கொரோனாவினால் முடங்கி போயிருந்த ஆபரண வர்த்தகம், இந்த காலகட்டத்தில் முழுவதும் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து, வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. இது மூன்றாவது காலாண்டில் முழு மீட்புக்கு அருகில் வளர்ச்சியினையும் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
விற்பனை அதிகரிக்கும்
அதோடு வரவிருக்கும் விழாக்காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் பலத்த சரிவுக்கு பிறகு தற்போது தான் ஏற்றத்தினை கண்டு வருவதாகவும் கூறியுள்ளது. ஆக மூன்றாவது காலாண்டு அவ்வளவாக மோசமாக இருக்காது. ஜூவல்லரி வர்த்தகம் மீட்பு பிரிவில் இருந்து, வளர்ச்சி பிரிவுக்கு திரும்பியுள்ளது. இதனால் இறுதி காலாண்டில் எதிர்பார்ப்பினை விட நன்றாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வசம் எவ்வளவு பங்கு?
சமீபத்திய அறிக்கையின் படி, ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் அவரின் மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா ஆகியோர் டைட்டன் நிறுவனத்தில் 5.52 சதவீதம் பங்குகளை வைத்துள்ளனர். இதில் ராகேஷ் 4.43 சதவீத பங்குகளையும், இதே ரேகா 1.09 சதவீதம் பங்குகளையும் வைத்துள்ளனர்.
டைட்டன் பங்கு விலை
லார்ஜ் கேப் பங்கானது இதற்கிடையில் இன்று 1620.95 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது பிஎஸ்இ-யில் முந்தைய நாள் முடிவு விலையுடன் ஒப்பிடும்போது 3.33% ஏற்றம் கண்டு, 1620.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது முந்தைய நாள் முடிவு விலையானது 1568.75 ரூபாயாக இருந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 2.47% அதிகரித்துள்ளது.
டைட்டன் பங்கு ஏற்றம்
டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலையானது அதன் 52 வார குறைந்த விலையில் இருந்து, 125.13% ஏற்றம் கண்டுள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 720 ரூபாயாகும். இது கடந்த மார்ச் 24,2020ல் தொட்டது. ஆபரணத் தேவையானது தற்போது திருமண விழா, பண்டிகை காலகட்டங்களில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த தீபாவளி பருவத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டைட்டன் நிறுவனத்தின் வளர்ச்சியும் மீள்ச்சி கண்டு வருகிறது.