தமிழ்நாட்டில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்தூரில் அமைக்கப்படுமா இல்லையா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில் மற்றொரு விமான நிலையம் தொடர்பாக ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஒரு ஊர் ராமேஸ்வரம். இங்கே விமான நிலையம் இருந்தால் சுற்றுலா இன்னும் மேம்படும் என நீண்ட காலமாக கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு, இந்திய விமான நிலைய ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தி இந்து வெளியிட்டுள்ள செய்தியின் படி, தமிழக அரசுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் சமீபத்தில் அனுப்பிய கடிதத்தில், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க தாங்கள் ஆர்வமாக இருப்பதாகவும், இதற்கான இடத்தை தேர்வு செய்து, நிலத்தை கையகப்படுத்தி தருமாறும் கேட்டுகொண்டுள்ளது.
ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்த விமான நிலையத்தை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். மாநில அரசு இடத்தை தேர்வு செய்து நிலத்தை வழங்கினால், இந்த திட்டத்தை பிராந்திய இணைப்பு - உதான் (RCS-UDAN) திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடியும் என விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான கோரிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு தேவிபட்டினம், பாவன்குளம், சாத்தகோன்வலசை, பிரப்பன்வலசை மற்றும் திருப்புல்லாணி ஆகிய ஐந்து இடங்களை அடையாளம் கண்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், இந்த ஐந்து இடங்கள் இரண்டாக குறைக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்யுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த இடங்களை நேரில் ஆய்வு செய்த ஆணையம், திருப்புல்லாணிக்கு அருகிலுள்ள கீழக்கரை இடத்தை விமான நிலையம் அமைக்க மிகவும் ஏற்றதாக பரிந்துரைத்துள்ளது.
ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான மற்றொரு இடமாக உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து விமான தளத்தை பயன்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலித்தது. அங்கு வணிக ரீதியிலான விமானங்களை இயக்க சிவில் என்கிளேவ் எனப்படும் தனிப் பகுதி) அமைக்க வாய்ப்பிருந்தாலும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில், எந்த இடமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உச்சிப்புளி மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களும் ஆய்வு செய்யபட்டுள்ளன. பல்வேறு அம்சங்களை ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதே வேளையில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை விமான நிலையம் அருகிலேயே உள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல மூன்றரை மணி நேரமே ஆவதால், ராமேஸ்வரத்திற்கு தனியாக ஒரு விமான நிலையம் தேவையா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications

