இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரட்ஸ் அமைப்பின் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா இன்று தனது 85வது பிறந்த நாள்-ஐ கொண்டாடுகிறார்.
ரத்தன் டாடா வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் இன்று வரையில் அவருடைய மனதை காயப்படுத்திக்கொண்டு வருகிறது, குறிப்பாகத் தனது பர்சனல் வாழ்க்கையில் நடத்த சில விஷயங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது வாங்க பார்ப்போம்..
ரத்தன் டாடா
சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் தொழிலதிபர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக இருக்கும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சில வருடங்களுக்கு முன்பு ஒரு இணையதள நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது அந்தரங்க வாழ்வில் நடந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
காதல், பெற்றோர் விவாகரத்து
இந்தப் பேட்டியில் ரத்தன் டாடா-வுக்கு ஏற்பட்ட காதல் அந்தக் காதல் திருமணம் வரை சென்று தோல்வி அடைந்தது மற்றும் அவரது பெற்றோரின் மன முறிவால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எனச் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
குழந்தை பருவம்
அதில் ரத்தன் டாடா என்னுடைய குழந்தை பருவம் நன்றாகச் சென்றது ஆனால் என்னுடைய தாய் தந்தையின் திருமண முறிவும், விவாகரத்தும் என்னையும் என்னுடைய சகோதரரையும் நிறையக் கஷ்டங்களைச் சந்திக்கும் நிலையை உருவாக்கியது.
விவாகரத்து
அந்த நாளில் விவாகரத்து என்பது இப்போது போல் சாதாரண விஷயம் அல்ல எனக் கூறியுள்ளார். மேலும் எங்களைப் பாட்டி தான் கவனித்துக் கொண்டார் என்னுடைய அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தபோது பள்ளியில் என்னையும் என் சகோதரரையும் புண்படும்படி பேசுவார்கள், கேலி செய்வார்கள் எங்களைச் சண்டை போட தூண்டுவார்கள்.
பாட்டி அரவணைப்பு
ஆனால் அந்த நேரத்தில் எங்கள் பாட்டி எங்களைச் சண்டை போடக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறுவார். என்ன நடந்தாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என ரத்தன் டாடா இப்பேட்டியில் கூறியுள்ளார்.
தந்தை
மேலும் ரத்தன் டாடா இந்தப் பேட்டியில் தன்னுடைய தந்தையுடன் தனக்கு இருக்கும் மனக்கசப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார் இப்போது யார் சரி யார் தவறு என்று கூறுவது எளிது. நான் வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தேன் ஆனால் என் தந்தை பியானோ கற்க வேண்டும் எனக் கூறினார் நான் படிப்பதற்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்றேன் தன்னைப் பிரிட்டன் செல்ல வேண்டும் எனக் கூறினார்.
விருப்பம்
நான் கட்டிட வடிவமைப்பாளர் ஆகவேண்டும் என நினைத்தேன் ஆனால் என் தந்தை நான் பொறியாளராக வேண்டும் என எண்ணினார் என்றார் ரத்தன் டாடா. தாயின் 2வது திருமணத்திற்குப் பின்பு தாய் உடனான உறவு பெரிய அளவில் குறைந்தது. இதனால் ரத்தன் டாடா வாழ்க்கையில் தாயை விடவும் பாட்டி, தந்தையின் பங்கு தான் அதிகம்.
அமெரிக்கப் பயணம்
இப்படித் தந்தை மற்றும் மகன் தொடர்ந்து முரண்பட்டு இருந்த வேளையில் ரத்தன் டாடா தனது விருப்பப்படி அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகத்துக்குப் படிக்கச் சென்றார், இதற்கு முழுக் காரணமும் தன் பாட்டி தான் எனவும் கூறினார்.
கட்டிட வடிவமைப்பாளர் பட்டம்
முதலில் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்காகப் பதிவு செய்தார் ஆனால் கட்டிட வடிவமைப்பாளர் பிரிவில் பட்டம் பெற்றார்.
லாஸ் ஏஞ்சலஸ் காதல்
லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருந்தபோது தன் மனதுக்குப் பிடித்த பெண்ணைக் கண்டதாகக் கூறினார், லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் போதுதான் எனக்குக் காதல் ஏற்பட்டது அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய பாட்டிக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் நான் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.
இந்தியா - சீனா போர்
என்னுடைய காதலியும் இந்தியாவுக்கு என்னுடன் வருவார் என எண்ணினேன், ஆனால் 1962ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சீனாவுடன் போர் மூண்டதால் தனது காதலியின் தாய் தந்தை அவரை இந்தியா வர அனுமதிக்கவில்லை இதனால் எங்கள் உறவு முறிந்தது என்று கூறினார்.
காதல் - திருமணம்
பின்பு தனது காதலியை சந்திக்கவில்லை என்றும், அதன் பின்பு வேறு ஒருவர் மீது காதலில் விழ விருப்பம் இல்லாத ரத்தன் டாடா பிஸ்னஸ் மீது காதல் கொண்டார். ஆனாலும் ரத்தன் டாடா குடும்பம் அவருக்கு 4 முறை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எட்டிய போதும் பல்வேறு காரணத்தால் திருமணம் செய்ய மறுத்தார்.
தனிமை
வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள், குடும்பம் இல்லாமல் இருக்கும் எது உங்களை ஊக்கப்படுத்துகிறது என ஒரு பேட்டியில் ரத்தன் டாடா-வை கேட்ட போது. எது ஊக்கப்படுத்துகிறது என்பதை விடப் பல முறை தனிமையில் இருப்பதை எண்ணி வருந்தியுள்ளேன், பல முறை நமக்கென ஒரு குடும்பம் வேண்டும் என எண்ணியுள்ளேன்.
தனிமை கொடியது
இதே நேரத்தில் பல முறை தனிமை, குடும்பம் இல்லாத சுதந்திரத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளேன். குடும்பம் இல்லாத காரணத்தால் அவர்களின் விருப்பம், எண்ணம், தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமா என்பதைப் பற்றிக் கவலை அடையத் தேவையில்லை எனக் கூறியுள்ளார். ஆனால் சமீபத்தில் முதியோருக்கான ஒரு நிறுவனத்தைத் துவங்கி வைத்த போது தனிமை எவ்வளவு கொடியது என எனக்குத் தெரியும் எனக் கண்கலங்கினார்.