இந்தியாவில் எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் தலைமை மாறும் போது சில அதிர்வலைகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் டாடா குழுமத்தில் ரத்தன் டாடா தலைமை பதவியை விட்டுச் செல்லும் போது மக்கள் மத்தியில் ஒரு வருத்தம் உருவானது.
டாடா குழுமத்தின் சார்பாக ரத்தன் டாடா மக்களுக்கான பல உதவிகளையும், சேவைகளையும் தொடர்ந்து செய்து வந்த நிலையில் மக்களுக்கு ரத்தன் டாடா மீது அன்பும் மரியாதையும் மிகவும் அதிகம். இதேவேளையில் ரத்தன் டாடா தலைமையில் டாடா குழுமம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த காரணத்தால் தொழிற்துறையினர் மத்தியிலும் ரத்தன் டாடாவுக்குப் பெரும் மதிப்பு உள்ளது.
இந்த வேளையில் ரத்தன் டாடா இன்று தனது 85வது பிறந்தநாள்-ஐ கொண்டாடுகிறார்.
ரத்தன் நாவல் டாடா
ரத்தன் நாவல் டாடா டிசம்பர் 28, 1937 இல் மும்பையில் பிறந்தார், அவருக்கு இன்று 85 வயது. டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா, ரத்தன் டாடாவின் தாத்தா ஆவார். அவர் தனது பாட்டி நவாஜ்பாய் டாடா -வால் வளர்க்கப்பட்டார்.
பெற்றோர் விவாகரத்து
1948 இல் அவரது பெற்றோர் விவாகரத்து செய்யும் போது அவருக்குப் பத்து வயது என்பதால் பாட்டி வளர்ப்பில் இருந்தார். மும்பையில் தனது ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை கல்வியை முடித்த பிறகு, 1955 இல் நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கன்ட்ரி ஸ்கூலில் டிப்ளோமா பெற்றார்.
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்
ரத்தன் டாடா 1959 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பொறியியல் மற்றும் கட்டிடக்கலையில் பட்டம் பெறச் சேர்ந்தார். பின்னர், 1975 இல், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாகத் படிப்பில் சேர்ந்தார்.
டாடா ஸ்டீல்
ரத்தன் டாடா தனது முதல் வேலையை டாடா குழுமத்திலேயே தொடங்கினார். அப்போது டாடா குழுமத்தில் அதிக மதிப்புடைய நிறுவனமாக இருந்த டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ரத்தன் டாடா-வுக்கு முதல் பொறுப்புப் பிளாஸ்ட் பர்னேஸ் மற்றும் சுண்ணாம்புக் கிணறு ஆகியவற்றை மேற்பார்வையிடுவதாகும்.
IBM நிறுவன வேலை
ரத்தன் டாடா தனது குடும்ப நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற பின்பு அவரைத் தேடி வந்த IBM நிறுவனத்தின் முக்கிய வேலை வாய்ப்பை நிராகரித்தார்.இதன் பின்பு தான் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தார்.
பிரம்மாண்ட வளர்ச்சி
ரத்தன் டாடா தலைமையின் கீழ், டாடா குழுமத்தின் வருவாய் 40 மடங்கு மேல் அதிகரித்துள்ளது. லாபம் 50 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. டாடா குழுமம் நிறுவனம் 1991 இல் 5.7 பில்லியன் டாலர்களை மட்டுமே ஈட்டிய நிலையில் 2016 இல் சுமார் 103 பில்லியன் டாலர்களை ஈட்டியது.
முக்கிய இணைப்பு
டாடா குழுமத்தில் ரத்தன் டாடா நிர்வாகத்தின் கீழ் தான் டாடா டீ உடன் டெட்லி இணைப்பு, டாடா மோட்டார்ஸ் உடன் லேண்ட் ரோவர் ஜாகுவாரின் இணைப்பு, டாடா ஸ்டீல் உடன் Corus இணைப்பு ஆகியவை நடந்தது. டாடா ஏர் இந்திய தாண்டி டாடா குழுமத்தின் முக்கிய இணைப்பாகப் பார்க்கப்படும் அனைத்து இணைப்பும் ரத்தன் டாடா தலைமையில் தான் நடந்தது.
பைலட் ரத்தன் டாடா
ரத்தன் டாடா ஒரு திறமையான விமானி அதாவது பைலட் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 2007 ஆம் ஆண்டில், ரத்தன் டாடா F-16 ஃபால்கன் விமானத்தை இயக்கிய முதல் இந்தியர் ஆவார்.


Click it and Unblock the Notifications