இந்தியாவின் தவிர்க்க முடியாத தொழில் குழுமங்களில் ஒன்று டாடா. 100 ஆண்டு பழமையான டாடா குழுமம் இன்று வரை நிலைத்து நிற்பதற்கு அவர்கள் தங்கள் ஊழியர்களை நடத்தும் விதமும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.
அப்பேற்பட்ட டாடா குழுமத்தை கடந்த சில தசாப்தங்களாக வழி நடத்திக் கொண்டு இருப்பவர், இந்திய தொழில் துறையின் முகமாக இருக்கும் ரத்தன் டாடா.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது அக்கறை கொண்ட இந்த தொழில் அதிபர், கொரோனா காலத்தில் ஊழியர்கள் லே ஆஃப் செய்யப்படுவது பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.
இந்தியா இன்க் (India Inc)
கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை சரசரவென வீட்டுக்கு அனுப்பினார்கள். ஐடி கம்பெனிகள் எல்லாம் கொத்து கொத்தாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். பல கம்பெனிகளில் முறையான சலுகைகளைக் கூட கொடுக்கவில்லை எனச் செய்திகள் வெளியாயின. அது தொடர்பாக பல செய்திகளைப் படித்தோம்.
ரத்தன் டாடாவின் கருத்து
அந்த லே ஆஃப் தொடர்பாக ரத்தன் டாடா "கொரோனா வைரஸ் பிரச்சனை காலத்தில், இந்திய கம்பெனிகள், தன் ஊழியர்களை லே ஆஃப் செய்தது, இந்திய கம்பெனி தலைவர்களுக்கு Empathy (மற்றவர்கள் உணர்வை புரிந்து கொள்ளாதது) இல்லாததைக் காட்டுகிறது" எனச் சொல்லி இருக்கிறார். இந்த செய்தியைப் பார்க்கும் போது, ஊழியர்கள் தரப்பில் இருந்து ஒரு தொழிலதிபராவது குரல் கொடுத்து இருக்கிறாரே என நம்மைப் போன்ற ஊழியர்களை உருக வைக்கிறது டாடாவின் கேள்விகள்.
டாடாவின் கேள்வி
சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிகை நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் "ஊழியர்கள் கம்பெனிக்காக வேலை பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் வேலை காலம் முழுமைக்கும் கம்பெனிக்கு உழைத்து இருக்கிறார்கள். ஒரு நெருக்கடி என்று வரும் போது, கம்பெனி அவர்களை வெளியே அனுப்பிவிடுகிறது. இது நியாயமா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
டாடா குழுமத்தில் என்ன கதி
டாடா குழுமம் இதுவரை, எந்த ஊழியரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை. ஆனால் சம்பள குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். டாடா ஏர்லைன்ஸ், ஹோட்டல்ஸ், நிதி சேவைகள், ஆட்டோமொபைல் போன்ற வியாபாரங்கள் எல்லாம் கொரோனாவால் பயங்கரமாக அடி வாங்கி இருக்கிறது. இருப்பினும் இதுவரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கவில்லை என்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை.
கம்பெனி நிலைக்காது
ஒரு கம்பெனி, தன் (மக்களை) ஊழியர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், (Sensitive to its people) அது, ஒரு கம்பெனியாக நிலைக்க முடியாது என தெளிவாகச் சொல்லி இருக்கிறார் ரத்தன் டாடா. 100 ஆண்டு கால கம்பெனியை வழி நடத்தியவர் சொன்னது தவறாக இருக்குமா என்ன?
லாபத்துக்கான பயணம்
எல்லோரும் லாபத்தை விரட்டிக் கொண்டிருக்கும் போது, லாபத்தை நோக்கிய பயணம் எந்த அளவுக்கு நியாயமானது என கேள்வி எழுப்ப வேண்டி இருக்கிறது. வியாபாரம் வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்ல. ஒருவர் எல்லாவற்றையும் சரியாகவும், வாடிக்கையாளர்களுக்கு, பங்குதாரர்களுக்கும் நியாயமானதைச் செய்ய வேண்டும்." எனச் சொல்லி இருக்கிறார் ரத்தன் டாடா.
மெய்யாலுமே நீங்க க்ரேட் சார்
ரத்தன் டாடாவுக்கு இருக்கும் சொத்து பத்துக்கு எல்லாம், ஊழியர்களைப் பற்றி யோசிப்பாரா என்று கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்படிப்பட்ட தொழிலதிபர், ஊழியர்கள் தரப்பில் இருந்து பேசியதைப் பார்க்கும் போது, ஒரு சாமானிய ஊழியனாக, பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உண்மையிலேயே மனதை உருக வைக்கிறது. இது போன்ற நல்ல குணங்களால் தான் டாடா 100 ஆண்டுகளைக் கடந்தும் டாடாவாகவே இருக்கிறார்கள். மெய்யாலுமே நீங்க க்ரேட் சார்.