இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழும நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் என்.சந்திரசேகரன் தொடர அனைத்து வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாகவும், உயர் மட்ட நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்கத் தயாராக உள்ளது எனத் தகவல் வெளியானது.
ஆனால் தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஆன டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடுப்பான ரத்தன் டாடா
திங்கட்கிழமை ரத்தன் டாடா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நான் தெளிவுபடுத்தியாக வேண்டும், டாடா சன்ஸ் தலைவராகச் சந்திரசேகரன் 2வது முறையாகத் தொடர்வது குறித்து இதுவரையில் யாரும் என்னிடம் அனுமதிக்கவும், ஒப்புதலுக்காகவும் அணுகவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிர்வாகத் தலைவர்
இதுமட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் நிர்வாகத் தலைவரை நியமிக்கும் போது முறையாக டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஆய்வு செய்து ஆலோசனை வெளிப்படைத்தன்மை உடன் முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயம் எனவும் டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனம்
சில நாட்களுக்கு முன்பு டாடா சன்ஸ் நிறுவனத்தின் சில அதிகாரிகள் சந்திரசேகரன் மீண்டும் சேர்மன் ஆக அறிவிக்க அனைத்து விதமான வாய்ப்புகளும் உள்ளது. அனைத்து தரப்பினரும் சந்திரசேகரன் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர்.
சந்திரசேகரன் விளக்கம்
இதுகுறித்து சந்திரசேகரன் கூறுகையில், வழக்கம் போல் அனைத்து நிர்வாக முடிவுகளைப் போல், தலைவர் பதவிக்கான நியமனம் குறித்த திட்டத்தை டாடா சன்ஸ் நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது, அதற்கான முடிவுகளை இன்னும் எட்டப்படாத நிலையில் ரத்தன் டாடா அவர்களிடம் முடிவுகளை இன்னும் கேட்கப்படவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சந்திரசேகரன் பதவிக் காலம்
சந்திரசேகரன் பதவி காலம் பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உடன் முடிவடைகிறது, தற்போது ரத்தன் டாடா உட்பட டாடா சன்ஸ் நிர்வாகம் முழுவதும் ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் அடுத்த 5 வருடம் டாடா சன்ஸ் சேர்மன் ஆக நியமிக்கப்படுவார்.
3 வருட வளர்ச்சி..
சந்திரசேகரன் நிர்வாகத்தின் கீழ் கடந்த 3 வருடத்தில் டாடா குழுமத்தின் விற்பனை அளவு 8 சதவீதம் வரையில் வளர்ச்சியில் 6.54 லட்சம் கோடியில் இருந்து 7.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் லாப அளவீடு 21,617 கோடி ரூபாயில் இருந்து 32,677 கோடி ரூபாய் வரையில் உயர்ந்து 51 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.