இந்தியாவில் ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசி, கோதுமை, தானியங்களை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரே அளவான ரேஷன் பொருள்கள் கிடைக்காது.
மத்திய அரசு, தற்போது 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013'இல் ஒரு திருத்தத்தைக் கொண்டுவர முன்மொழிந்துள்ளது. இதில் 'அந்தியோதயா அன்ன யோஜனா' (Antyodaya Anna Yojana - AAY) திட்டத்தில் அதிக மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த அட்டையின் கீழ் தான் தமிழ்நாட்டில் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இதனை நம்பியுள்ளது. மற்ற மாநிலங்களிலும் அரிசி , தானியம் ஆகியவை இவ்வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

தற்போதைய நடைமுறையின் படி, சில குடும்பங்கள் அதிக அரிசி மற்றும் தானியங்களையும் சில குடும்பங்கள் ஒப்பீட்டளவில் குறைவான தானியத்தையும் பெறுவதாக அரசு சுட்டிக்காட்டுகிறது. இந்த ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதே இப்புதிய முன்மொழிவின் நோக்கமாம்.
அதாவது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், குடும்ப அலகின் அடிப்படையிலேயே 35 கிலோ தானியம் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் இருந்தாலும் சரி அல்லது ஆறு உறுப்பினர்கள் இருந்தாலும் சரி, இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே அளவில், 35 கிலோ தானியமே கிடைக்கும். சிறிய குடும்பங்களில் உள்ள நபர்களுக்குத் தலா அதிக அளவு தானியம் கிடைக்கிறது, அதே சமயம் பெரிய குடும்பங்களில் தனிநபர் ஒருவருக்குக் கிடைக்கும் தானியத்தின் அளவு குறைகிறது.
எனவே, 'அந்தியோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் 7 கிலோ தானியம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முறை தானிய விநியோகத்தை சீராக்குவதுடன், சமமான வழங்கலை உறுதி செய்து மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் என அரசு நம்புகிறது.
தனிநபர் ஒருவருக்கு 7 கிலோ தானியம் வழங்குவது என்று முன்மொழியப்பட்டாலும், ஒரு குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச தானிய அளவு மாதத்திற்கு 35 கிலோ என்ற அளவிலேயே இருக்கும். அதாவது, இத்திட்டத்தில் தனிநபர் அடிப்படையிலான கணக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டாலும், குடும்ப அளவிலான தற்போதைய அதிகபட்ச வரம்பு தொடர்ந்து பராமரிக்கப்படும் என அரசு கூறுகிறது.
ரேஷன் கடை பொருட்கள் விநியோகிக்கப்படும் முறைக்கான இந்த மாற்றத்தை அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. தற்போது இது ஒரு வரைவு மசோதாவாகவே உள்ளது. இதற்கான பொதுமக்களின் ஆலோசனைகளும் கருத்துகளும் கோரப்பட்டுள்ளன. உணவு மற்றும் பொது விநியோகத் துறை, இந்த வரைவு மசோதாவுடன், தற்போதுள்ள மற்றும் முன்மொழியப்பட்ட விதிமுறைகளை ஒப்பிடும் ஆவணம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஜூலை 13, 2026 வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

