ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உலகம் முழுவதுமே பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. கச்சா எண்ணெய் சப்ளை நின்று போனதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயர்வு கண்டிருக்கின்றன. அந்த வகையில் ஈரான் நாட்டுப் போர் பல்வேறு நாடுகளின் மக்களை நேரடியாகவே பாதிப்படைய செய்திருக்கிறது.
எப்போதுதான் ஈரான் போர் முடியுமோ என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவும் ஈரான் தரப்பும் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதால் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. ஒரு நாள் போர் முடிவுக்கு வருவதற்கான சாதகமான பேச்சுகள் வருகின்றன அடுத்த நாளே இரு தரப்பும் அதற்கு முரணாக பேசுகின்றன. இந்த நிலையில் ஈரான் அமெரிக்கா இடையிலான போர் மட்டுமல்ல உலக அளவில் மறைமுகமாக உலகப்போரே தொடங்கிவிட்டது என பிரபல அமெரிக்க முதலீட்டு நிபுணரான ரே டேலியோ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

உலகப் போர் தொடங்குவதற்கான ஆரம்ப நிலைகளுக்கு இந்த உலகம் சென்று விட்டது என அவர் பகிரங்கமாக கூறியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் உலகப் போரின் ஒரு பகுதிதான் அமெரிக்கா -இஸ்ரேல்- ஈரான் போர், இந்த உலகம் ஏற்கனவே உலகப் போரின் தொடக்க நிலைக்கு சென்று விட்டது ,இது அத்தனை விரைவில் முடிந்து விடாது எனக் கூறியிருக்கிறார்.
பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் வரலாற்றை பல தசாப்தங்களாக ஆய்வு செய்தன் அடிப்படையில் தற்போதைய தருணம் World order எனப்படும் உலக ஒழுங்கின் ஒரு சிதைவை பிரதிபலிப்பதாக குறிப்பிடுகிறார். உலகம் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்த விதிகள் அடிப்படையில் இருந்து சிதறடிக்கப்பட்ட அதே வேளையில் 'வல்லவனே வெல்வான்' என்ற சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
உக்ரைன் - ரஷ்யா போர், ஈரான் போர் முதல் மேற்காசியா முழுவதும் நிலவக்கூடிய பதட்டங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மோதல்கள் இது ஒரு உலகப் போருக்கான இயக்கவியல் என அவர் குறிப்பிடுகிறார். ஈரான் போர் முடிந்த உடனேயே உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவிடும் என அனைவரும் எண்ணுகிறோம் ஆனால் அது அப்படி திரும்பாது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தலைமையிலான கூட்டமைப்பை எதிர்த்து சீனாவும் ரஷ்யாவும் மற்ற நாடுகளோடு அணி திரண்டு உள்ளன என சுட்டிக்காட்டும் அவர் ஒரு தெளிவான புவிசார் அரசியல் கூட்டணி உருவாகிறது என குறிக்கிறார். இந்த கூட்டணிகள் ஐநா சபையின் வாக்களிப்பு முறை, உலக பொருளாதாரம் வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
தற்போதுள்ள இந்த மோதல்கள் மூலம் சீனாவும் ரஷ்யாவும் வேகமாக வலுவடைந்து வருகின்றன, உலக அரசியலில் அமெரிக்கா தன்னுடைய இருப்பை இழந்து வருகிறது என கூறுகிறார். உலக நாடுகளின் கடன்கள் அதிகரிப்பு , ,ராணுவத்திற்கான செலவினங்கள் அதிகரிப்பு, பல நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகள், அத்யாவசிய பொருட்களின் விநியோக சங்கிலியில் பாதிப்பு இவையெல்லாம் உலக போரின் தொடக்கத்திற்கான அறிகுறிகள், இதற்கு முன்பு நடைபெற்ற உலக போர்களுக்கு முன்பும் இதே அறிகுறிகள் தான் தென்பட்டன என்கிறார்.
ஈரான் அமெரிக்கா போர் உடன் இந்த உலக போர்கள் நின்று விடாது என கூறும் அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய ஒரு போர் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார். மத்திய கிழக்கு , கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனா ஆகியவை இதில் பங்கேற்று இருக்கும் என கணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

