நடிகர் ஜீவாவின் தந்தையும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர். பி.சவுத்ரி ராஜஸ்தானில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆர்.பி. சவுத்ரி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் ஆர். பி .சவுத்ரி என்ற பெயரையும் அவருடைய சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் யாராலும் தவிர்க்கவே முடியாது. கிட்டத்தட்ட 38 ஆண்டுகாலம் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும் விஜய் உட்பட பல்வேறு நட்சத்திரங்களுக்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர் தான் ஆர்.பி.சவுத்ரி. தொடக்கத்தில் நகை மற்றும் இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு பின்னர் ஏற்றுமதி தொழிலில் இருந்தவர்தான் ஆர்.பி.சவுத்ரி. பின்னர்தான் திரைப்படத் தயாரிப்பு துறையில் கால் பதித்தார்.

1988 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ஆதி பாப்பம் படத்தை தயாரித்தது தான் தயாரித்து திரையுலகில் கால் பதித்தார் ஆர். பி.சவுத்ரி. இதனை அடுத்து மலையாளத்தில் பல்வேறு வெற்றி படங்களை அவர் தயாரித்தார். தமிழில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் திரைப்படம் தான் தமிழ் திரை உலகில் முன்னணி தயாரிப்பாளராக ஆர்.பி. சவுத்ரியை நிலை நிறுத்தியது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஒரு படம் தயாரிக்கிறது என்றால் நிச்சயம் அது குடும்பங்களோடு சென்று பார்க்கக் கூடிய ஒரு திரைப்படமாக தான் இருக்கும் என்ற நற்பெயரை வாங்கினார்.
சேரன் பாண்டியன், கோகுலம், நாட்டாமை, பூவே உனக்காக , மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே, சூர்யவம்சம், துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என ,ஆனந்தம், திருப்பாச்சி என சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த அனைத்து படங்களுமே குடும்பங்களோடு அமர்ந்து பார்க்கக்கூடிய அதே வேளையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் மட்டுமில்லாமல் சிறந்த கதைகளைக் கொண்டதாக இருக்கும். அனைத்து வயதினரையும் ஈர்க்கக் கூடிய வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் வல்லவர்தான் ஆர்.பி. சவுத்ரி.

தமிழ் திரையுலகில் பல்வேறு இயக்குனர்களுக்கு வாழ்க்கை தந்தவர். கிட்டத்தட்ட 44 புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தவர். விக்ரமன், கே எஸ் ரவிக்குமார், சசி, பேரரசு ,லிங்குசாமி ,எழில், ராஜ்குமார் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்களும் தயங்கிய காலத்திலேயே முதல் ஆளாக வந்து வாய்ப்பு தந்தவர் .சவுத்ரி சரத்குமாரை ஒரு மாஸ் ஸ்டாராக உருவாக்கிய நாட்டாமை திரைப்படத்தை தயாரித்தது ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தான்.
முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை ஒரு மாஸ் ஹீரோவாக கொண்டு வர காரணமான பூவே உனக்காக திரைப்படத்தை தயாரித்ததும் ஆர்.பி.சவுத்ரி தான். அண்மையில் கூட சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மாரீசன் மற்றும் மகுடம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தன்னுடைய நூறாவது திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற கனவோடு இருந்தார் ஆனால் அந்த கனவு நிறைவடையாமலேயே அவருடைய வாழ்க்கை பயணம் முடிந்திருக்கிறது.
ஆர்.பி.சவுத்ரிக்கு ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே நடிகர்கள், அதே வேளையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தையும் கவனித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications

