அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு, புதிய நிர்வாகியையும் நியமித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இது குறித்து வெளியான அறிக்கையில், வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த தவறியதன் காரணமாக நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்துள்ளது.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் பணத்தை திரும்ப செலுத்த வேண்டியவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்ற நிலையில், இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பலத்த கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து வரும் அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்த வண்ணமே உள்ளது.
பணத்தை திரும்ப செலுத்தவில்லை
மேலும் பணத்தினை திரும்ப செலுத்துவதற்காக இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதனை முழுமையாக செய்ய இயலவில்லை. இதனால் முதலீட்டாளர்களுக்கு சரியாக பணத்தினை திரும்ப செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கி இப்படியொரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிய நிர்வாகி யார்
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக குழு கலைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேங்க் ஆப் மஹாராஷ்டிராவின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நாகேஸ்வர் ராவ், இந்நிறுவனத்துக்கான நிர்வாகியாக நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
திவால் நடவடிக்கை
மேலும் திவால் சட்டத்தின் கீழ் நிறுவனத்தின் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அனில் அம்பானியின் பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டத்திலேயே இயங்கி வரும் நிலையில், தொடர்ந்து பல்வேறு கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து வருகிறார் அனில் அம்பானி.
என்னென்ன வணிகம்
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு முன்னணி நிதி நிறுவனமாக இருந்து வந்தது. இது இன்சூரன்ஸ், சொத்து நிர்வகித்தல், சொத்து புனரமைப்பு உள்ளிட்ட பல வணிகங்களையும் செய்து வந்தது.
கடந்த 2020 - 21ல் 64,878 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு விலை
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் பங்கு விலை என்.எஸ்.இ-ல் இன்று 4.99% குறைந்து, 18.10 ரூபாயாக உள்ளது.
இதே பி.எஸ்.இ-ல் பங்கு விலை என்.எஸ்.இ-ல் இன்று 4.99% குறைந்து, 18.10 ரூபாயாக உள்ளது.
இதன் உச்சம் மற்றும் குறைந்தபட்ச விலை 18.10 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 30.80 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 8.82 ரூபாயாகும்.
தொடர் நஷ்டம்
இந்த நிறுவனத்தினை பொறுத்தவரையில் புரோமோட்டார்கள் இல்லை. மாறாக பொது முதலீடுகள் தான் அதிகம். தற்போதைய நிலவரப்படி 97.8% ஆக உள்ளது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு நஷ்டத்தினை கண்டு வருகின்றது. 2020 - 21ல் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 19,308 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிகர நஷ்டமாக 9,287 கோடி ரூபாயாகவும் இருந்தது. இது முந்தைய ஆண்டில் 1,199 கோடி ரூபாய் நிகர இழப்புடன், 18,359 கோடி ரூபாயாக வருவாய் இருந்தது.
ரேட்டிங் குறைப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கினை குறைத்தது. இது இந்த நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பாக அமைந்தது எனலாம்.
ஏற்கனவே ரிலையன்ஸ் குழுமத்தினை சேர்ந்த ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் பெருத்த கடன் பிரச்சகைகளுக்கு மத்தியில் திவால் நிலையில் உள்ளன.