RBL வங்கியின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக சுப்பிரமணிய குமார் என்பவரை நியமனம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர் சுப்பிரமணிய குமார் என்பவர் RBL வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 இன் பிரிவு 35B பிரிவின் படி ஆர் சுப்பிரமணிய குமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் என RBL வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
RBL வங்கி
ஆர். சுப்பிரமணிய குமார் அவர்களை நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓவாக நியமனம் செய்ய ஒப்புதல் அளிப்பதற்கு தேவையான நடைமுறைகள் முடிந்துவிட்டதாகவும், வங்கியின் நிர்வாக இயக்குநர் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று RBL வங்கி தெரிவித்துள்ளது.
40 ஆண்டுகள் அனுபவம்
40 ஆண்டுகளுக்கு மேலாக வங்கித் துறையில் அனுபவமுள்ள சுப்பிரமணிய குமார் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து உள்ளார். மேலும் சிக்கலில் இருந்த திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகியாகவும் இருந்து ரிசர்வ் வங்கியால் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதியான நபர்
இந்த நிலையில் RBL வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றிருக்கும் சுப்பிரமணிய குமார் அவர்களை ஆர்பிஎல் வங்கி நிர்வாகம் அன்புடன் வரவேற்றுள்ளது. RBL வங்கியின் வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் தகுதி வாய்ந்த நபரை நாங்கள் பெற்றுள்ளோம் என்று RBL வங்கியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு
RBL வங்கியின் தலைவர் பிரகாஷ் சந்திரா அவர்கள் சுப்பிரமணிய குமார் நியமனம் குறித்து கூறிய போது 'RBL வங்கிக்கு சுப்பிரமணிய குமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் என்றும் வங்கித்துறையில் மூத்த அனுபவம் உள்ள அவரது அனுபவம் மற்றும் ஆதரவு எங்கள் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்' என்றும் கூறியுள்ளார். மேலும் RBL வங்கியின் அதிகமான ஆற்றலை புதுப்பிக்க அவருடைய தலைமை எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
புதிய உயரம்
இந்த நிலையில் ஆர்பிஎல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பதவியை ஏற்ற சுப்பிரமணிய குமார், 'RBL வங்கியின் நிர்வாக குழுவுடன் இணைந்திருப்பதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வங்கியின் வளம் மற்றும் வரவிருக்கும் மகத்தான வாய்ப்பை கருத்தில் கொண்டு புதிய உயரங்களை எட்ட என்னால் முடிந்ததை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
7 லட்சம் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகளில் ஒன்றான RBL வங்கி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது என்பதும், இந்த வங்கியின் அனைத்து கிளைகளிலும் 7 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications