கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவின் காரணமாக இந்திய வங்கிகளில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வராக்கடன் உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் வெளியானதில் இருந்து வங்கி பங்குகள் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியத் தனியார் வங்கித் துறையில் முன்னணி வங்கியாகத் திகழும் இன்ட்ஸ்இந்த் வங்கி பங்குகள் இன்று ஒரு நாளில் மட்டும் தடாலடியாகச் சுமார் 4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?!
வெளிநாட்டு முதலீடு
இண்டஸ்இந்த் வங்கியின் 5 சதவீத பங்குகளை அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ரூட் ஒன் இன்லெஸ்ட்மென்ட் கம்பெனிக்கு விற்பனை செய்ய ஏற்கனவே திட்டமிட்டு, ஜூலை 5ஆம் தேதி வங்கி நிர்வாகக் குழு முடிவு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் வங்கி நிர்வாகம் இந்த முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற விண்ணப்பம் செய்திருந்தது.
இன்று ரிசர்வ் வங்கி இந்த முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு அளவு
அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ரூட் ஒன் இன்லெஸ்ட்மென்ட் கம்பெனி ஏற்கனவே இண்டஸ்இந்த் வங்கியில் 4.96 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், தற்போது கூடுதல் முதலீட்டின் மூலம் இவ்வங்கியின் தனது பங்கு உரிமையை இரட்டிப்பு செய்துள்ளது.
485 மில்லியன் டாலர்
தற்போது இண்டஸ்இந்த் வங்கியில் ரூட் ஒன் இன்லெஸ்ட்மென்ட் கம்பெனி சுமார் 485 மில்லியன் டாலர் அதாவது 3,631.5 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்து சுமார் 5 சதவீத பங்குகளைக் கைப்பற்ற உள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் ரூட் ஒன் இன்லெஸ்ட்மென்ட் கம்பெனி, இன்டஸ் இந்த் நிறுவனத்தில் தனது பங்கு அளவீட்டை 10 சதவீதமாக உயர்த்த உள்ளது.
வராக் கடன்
ரிசர்வ் வங்கி கொடுத்த 6 மாத கடன் சலுகை திட்டம் முடியும் பின் இந்திய வங்கித்துறையில் வராக்கடன் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வங்கிகள் இந்த வராக்கடன் சமாளிக்கப் போதுமான நிதியைச் சேர்க்க வேண்டும் என முடிவு செய்து அதிகளவிலான நிதியைத் திரட்டி வருகிறது.
இதன் வாயிலாகத் தான் தற்போது சந்தையில் உள்ள பிற வங்கிகளைப் போல் இண்டஸ்இந்த் வங்கி நிதி திரட்டியுள்ளது.