வங்கித் துறையில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமயாக்கலுக்கு மத்தியில், யுபிஐ சேவையின் பயன்பாடு என்பது இன்று முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக மாறியுள்ளது.
அத்தகைய யுபிஐ சேவை பயன்பாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் பேடிஎம்மும் ஒன்று.
பேடிஎம் பேமெண்ட்ஸ் சர்வீசஸ் (PPSL) கடந்த சனிக்கிழமையன்று பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிவிக்கையில், ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதற்காக உரிமத்தினை வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மீண்டும் விண்ணபிக்கலாம்
பேடிஎம் நிறுவனம் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு பேமெண்ட் அக்ரிகேட்டர் (PA) சேவை செய்வதற்கான அனுமதிக்கு ஃபின்டெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், ஆக பிரச்சனைகளை களைந்து 120 நாட்களுக்குள் திரும்ப விண்ணப்பிக்குமாறும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அனுமதி பெற்ற நிறுவனங்கள்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இவ்வாறு அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் பேடிஎம்முக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை எனலாம். இதில் ரோசர்பே, பைன்லேப்ஸ், கேஸ்ஃப்ரீ, சிசிஅவென்யூ போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதே பில்டெஸ்க் மற்றும் பேயு நிறுவனங்கள் அனுமதிக்காக காத்துக் கொண்டுள்ளன.
இதே மொபிகுவிக் நிறுவனத்தில் நிகர மதிப்பு பற்றாக்குறைக்கு மத்தியில், அதன் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனுமதி கிடைக்கும்
இதற்கிடையில் இது குறித்து பேடிஎம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ரிசர்வ் வங்கி எங்களது விண்ணப்பத்தினை நிராகரிக்கவில்லை. சில காரணங்களுக்காக திரும்ப விண்ணப்பிக்க கூறியுள்ளது. நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
தொடர் நஷ்டம்
ஏற்கனவே பேடிஎம் பங்கானது பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்தே, இந்த பங்கின் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று வரையில் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தினையே கண்டும் வரும் நிலையில், செப்டம்பர் காலாண்டிலும் நஷ்டத்தினையே கண்டது. எனினும் நிறுவனம் லாபகரமான நிதி சேவையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளதாகவும் ஷர்மா அந்த சமயத்தில் தெரிவித்திருந்தார்.
விரைவில் லாப பாதைக்கு திரும்புவோம்
சமீபத்திய காலாண்டுகளாக தொடர்ந்து வலுவாக செயல்பாட்டு லீவரேஜ் மற்றும் எபிட்டா இழப்புகளை கண்டது. தற்போது லாபகரமான நிறுவனமாக மாறும் அளவுக்கு நெருங்கியுள்ளோம். இதன் மூலம் அடுத்த ஆண்டு எங்கள் பயணம் நேர்மறையாக இருக்கும். இது குறித்து நான் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஆறுதலை கொடுத்தாலும், தொடர்ந்து நஷ்டத்தில் இருந்து வருவது கவலையளிக்கும் ஒன்றாக இருந்து வருகின்றது.
முதலீட்டாளர்களின் கவனம்
இதற்கிடையில் தற்போது PA-வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது மேலும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் 120 நாட்களில் மீண்டும் விண்ணப்பிக்க கூறியிருப்பது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு இதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டால் அது மேற்கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம். இது நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். ஆக நிச்சயம் பேடிஎம் முதலீட்டாளர்கள் தொடர்ந்து இதனை உன்னிப்பாக கவனிப்பார்கள் எனலாம்.
பங்கு விலை நிலவரம்?
பேடிஎம் பங்கு விலையானது கடந்த அமர்வில் என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 5.46% அதிகரித்து,465.20 ரூபாயாக வர்த்தகமாகி முடிவ்வடைந்துள்ளது. கடந்த அமர்வில் இதன் உச்ச விலை 475.30 ரூபாயாகும். அன்றைய குறைந்தபட்ச விலை 448 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 5.38% அதிகரித்து, 464.80 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. கடந்த அமர்வில் இதன் உச்ச விலை 474.95 ரூபாயாகும். அன்றைய குறைந்தபட்ச விலை 448 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1875 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 439.60 ரூபாயாகவும் உள்ளது.