இன்று லோக்சபா கூட்டத்தில் மத்திய அரசு இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி குறித்து முக்கியமான கேள்விக்குப் பதில் அளித்துள்ளது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கியமாகக் கவனிக்கப்பட்ட இரு முக்கிய மசோதாவில் ஒன்று 3 விவசாயச் சட்டத்தை ரத்து செய்யும் மசோதா, இது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான முழக்கத்திற்கு மத்தியிலும் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் ஒப்புதல் பெற்றது.
இதைத்தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு மசோதா டிஜிட்டல் கரன்சி மசோதா.
குளிர்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முதல் நாளே மத்திய அரசு டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்வது குறித்து ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும், அதற்கான விளக்கத்தைக் குறித்துக் கேள்வி எதிர்கொண்டது. இந்த முக்கியமான கேள்விக்குத் தான் அனைத்து தரப்பினரும் பதிலை எதிர்பார்த்து இருந்த வேளையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி
அக்டோபர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ல் 'வங்கி நோட்டு' என்பதற்கான விளக்கத்தைச் சற்று மாற்றம் செய்ய அனுமதி கோரி டிஜிட்டல் வாயிலான பணம் என்பதைக் கூடுதலாகச் சேர்த்தது.
ரிசர்வ் வங்கி
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தலைமையிலான குழு சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி-யை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது. மேலும் இந்தச் சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி எப்படிப் பயன்படுத்துவது அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
காகித பணம்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய மிக முக்கியமான காரணம் காகித பணத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் இருந்து மீண்டு வருவது, குறைவான கட்டணத்தில் நிதி பரிமாற்றத்தைச் செய்வது, பணப் பரிமாற்றத்தில் ஆபத்தைக் குறைப்பதற்கு என மத்திய நிதியமைச்சகம் பதில் அளித்துள்ளது.
டிஜிட்டல் சந்தை - டிஜிட்டல் கரன்சி
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தையில் இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் அதிகப்படியான சந்தை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இதேபோல் நாணய நிர்வாகத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.