இந்தியாவின் மிக முக்கியமான பேமெண்ட் முறையாக இருக்கும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பேமெண்ட் தளத்தில் புதிய பாதுகாப்புகளைக் கொண்ட வர ரிசர்வ் வங்கி டோக்கன் முறையை அறிவித்தது.
இந்த டோக்கன் முறை மூலம் இனி இணையதளம் ஹேக் செய்யப்பட்டாலும் மக்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு திருட முடியாத என்ற முக்கிய பாதுகாப்பு அம்சம் கொண்டதால் ரிசர்வ் வங்கி உடனடியாக அமல்படுத்த வேண்டும் திட்டமிட்டு ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்தது.
ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி ஜூன் 30, 2022 வரையில் ஒத்தி வைத்துள்ளது.
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு
இந்தியாவில் கடந்த 2 வருடத்தில் பல டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வெப்சைட் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் பல லட்சம் இந்தியர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தரவுகள் திருடப்பட்டது.
ரிசர்வ் வங்கி
இத்தகைய பிரச்சனையைத் தீர்க்கும் திட்டம் தான் ரிசர்வ் வங்கியின் டோக்கன் சேவை. தற்போது டிஜிட்டல் மற்றும் பேமெண்ட் சேவை நிறுவனங்கள் இப்புதிய டோக்கன் முறையை நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்பத்தை இன்னும் உருவாக்காத காரணத்தால் ரிசர்வ் வங்கி ஜூன் 30, 2022 வரையில் ஒத்திவைத்துள்ளது.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தரவுகள்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வெளியிட்ட அமைப்பு மற்றும் கார்ட் நெட்வொர்க் (மாஸ்டர்கார்டு, விசா, ரூபே) தவிர வேறு எந்தொரு நிறுவனமும் அல்லது பேமெண்ட் தளமும் இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தரவுகளைச் சேமிக்கக் கூடாது, மேலும் இதற்கு முன் சேமித்து வைக்கப்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தரவுகளையும் டெலிட் செய்ய வேண்டும் எனப் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
16 இலக்கம் கொண்ட டோக்கன்
ரிசர்வ் வங்கியின் புதிய முறைப்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் நேரடியாக டெபிட் / கிரெடிட் கார்டு நம்பரை பயன்படுத்தாமல் கார்டு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு 16 இலக்கம் கொண்ட டிஜிட்டல் டோக்கன் எண் அனுப்பப்படும், அதை வைத்துப் பணப் பரிமாற்றத்தைச் செய்யலாம்.
ரிசர்வ் வங்கி பாதுகாப்பு
இதன் மூலம் பொது வெளியில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு நம்பரை பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாகப் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இதுதான் ரிசர்வ் வங்கி உருவாக்கிய பாதுகாப்பு வளையம்.
டோக்கன் வரைவு
டெபிட் / கிரெடிட் கார்டு பேமெண்ட்-க்கு இந்த டோக்கன்-ஐ தத்தம் கார்டு உரிமையாளர்களுக்கும், டோக்கன் ரெக்வஸ்ட் செய்யும் விற்பனையாளர்களிடம் மட்டுமே பயன்படுத்தும் படி இருக்கும். இதனால் இந்த டோக்கன் வேறு இடத்தில் பயன்படுத்தவும் முடியாது. இது கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கிறது.
ஜூன் 30 வரை நீட்டிப்பு
தற்போது ரிசர்வ் வங்கி ஜூன் 30, 2022 வரையில் டோக்கன் முறையை நடைமுறைப்படுத்தக் கால அவகாசம் கொடுத்துள்ள காரணத்தால் அனைத்து டிஜிட்டல் மற்றும் பேமெண்ட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் ஜூன் 30, 2022 வரையில் மக்களின் டெபிட் / கிரெடிட் கார்டு தரவுகளைச் சேமித்து வைத்திருக்க அனுமதி பெற்றுள்ளது.
2வது முறை நீட்டிப்பு
மார்ச் 2020லேயே ரிசர்வ் வங்கி அனைத்து டிஜிட்டல் மற்றும் பேமெண்ட் சேவை நிறுவனங்களுக்கும் மக்களின் டெபிட் / கிரெடிட் கார்டு தரவுகளைச் சேமிக்கக் கூடாது, இதற்குப் பதிலாக டோக்கன் முறையில் பேமெண்ட் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது. இந்தப் புதிய முறையை ஜூன் 2021ல் அமலாக்கம் செய்யப்பட முதலில் அறிவிக்கப்பட்டது, இதன் பின் ஜனவரி 1, தற்போது 2வது முறையாக ஜூன் 30, 2022 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.