இந்தியாவில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது புள்ளி விவரங்களில் இருந்து தெரியவருகிறது.
கடந்த மே மாதத்தில் இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு கிரெடிட் கார்டுகளில் செய்த செலவு தொகை ரூபாய் 1.14 டிரில்லியன் என அதிகரித்துள்ளது.
இந்த தொகை ஏப்ரல் மாதத்தில் செலவு செய்த தொகையை விட 8 சதவீதம் அதிகம் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்டுகள்
ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் கார்டில் செய்யப்படும் செலவுகள் 118 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் வங்கிகள் 1.7 மில்லியன் புதிய கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வழங்கியுள்ளது என்றும் இது 27 மாதங்களில் அதிக பட்சம் என்றும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு எண்ணிக்கையை விட இது 23.2 சதவீதம் அதிகம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகள்
குறிப்பாக ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ கார்டு மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய வங்கிகள் அதிக அளவில் கிரெடிட் கார்டுகளை புதிதாக வழங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் வழங்கப்பட்டுள்ள புதிய கிரெடிட் கார்டுகளையும் சேர்த்து இதுவரை மொத்தம் 76.9 மில்லியன் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி
மே மாதத்தில் மட்டும் எச்டிஎஃப்சி வங்கி 38,500 புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கி உள்ளது என்றும் ஆக்சிஸ் வங்கி 21,500 கிரெடிட் கார்டுகளையும், ஐசிஐசிஐ வங்கி 21,200 கிரெடிட் கார்டுகளையும் எஸ்பிஐ கார்டு 20, 200 புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இ-காமர்ஸ்
கிரெடிட் கார்டுகள் மூலம் பெரும்பாலும் இ-காமர்ஸ் பரிவர்த்தனையில் தான் அதிகமாக செலவு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் வருங்காலத்தில் கிரெடிட் கார்டு புதிதாக வழங்குவதில் எஸ்பிஐ கார்டு, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் பேங்க் போன்ற வங்கிகள் மிகச் சிறந்த அளவில் செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச்டிஎப்சி வங்கி
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஹெச்டிஎப்சி வங்கிக்கு எட்டு மாதங்களுக்கு புதிய கார்டு வழங்குவதற்கான தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடை நீக்கப்பட்ட பிறகு இந்த வங்கியின் கிரெடிட் கார்டுகளை அதிக அளவு வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடனை கட்டாதவர்கள்
கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வாங்கியவர்கள், கடனை கட்டாமல் இருக்கும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது நல்ல ஆரோக்கியத்தை காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை எவ்வாறெனினும் கட்டும் நிலையை இப்போது பார்க்க முடிகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் வங்கிகள் மிகுந்த ஆர்வத்துடன் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.