இன்றைய செய்தித் தாள்கள் ஆகட்டும், தொலைக்காட்சியாகட்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய செய்திகள் இல்லாமல் இருப்பதில்லை. .
அதிலும் அவர்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், நடந்தே அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதை காண முடிகிறது. இதனால் ஆங்காங்கே பல மோசமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அரசும் அவர்களுக்கு என சிறப்பு ரயில்கள் பேருந்துகள் என பலவும் ஏற்பாடு செய்து கொடுத்தாலும், புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் காத்திருக்க முடியாமல் நடந்து செல்வதையும் காண முடிகிறது.
பசியால் தொழிலாளர்கள் இறக்கலாம்
அதிலும் மக்கள் கொரோனாவால் இறந்து போகிறார்களோ இல்லை, பசியாலும், பட்டினியாலும் வறுமையாலும் இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.எனினும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் முழு செலவினையும் அரசே ஏற்றுக் கொள்வதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவசம்
மேலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அறிவிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 14ம் தேதியன்று அறிவித்தார். அதில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 5 கிலோ விலையில்லா அரிசி, அல்லது கோதுமை வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.
கிராமப்புற திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு
மாநில அரசுகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கவேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படும். அதோடு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். இதற்காக அரசு 3,500 கோடி ரூபாய் வரை செலவிடும் என்றும் கூறியிருந்தார்.
குறைந்த வாடகையில் வீடு
மேலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை வழங்கப்படும். குறைந்த வாடகையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைத்துத் தரப்படும். அதற்கான விரிவான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என பல திட்டங்களை அறிவித்தார்.
உதவிகளை பணமாக கொடுத்திருக்கலாம்
இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதார வல்லுனரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் முன்னாள் ஆளுநர் சி ரங்கராஜன் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அரசின் மேற்கூறிய இந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள், இது வறட்சி அல்லது வெள்ளத்தின் போது எவ்வாறு செயல்படும். அவர்களுக்கு பணமாக கொடுத்தால் மட்டுமே இது பயன்படும் என்றும் கூறியுள்ளார்.
வளர்ச்சியே இருக்காது
அதோடு நிதி ரீதியில் நிதி பற்றாக்குறையும் மிக பெரியதாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சிலர் கணித்துள்ள படி, 2020 -21ல் எந்த வளர்ச்சியும் இருக்காது அல்லது வளர்ச்சி விகிதம் கூட எதிர்மறையாக இருக்கக்கூடும். மையம் மற்றும் மாநிலங்களின் வருவாய் கணிப்புகள் முற்றிலும் தவறாகிவிடும். ஏனெனில் மையத்தில் வருவாய் கணிப்புகள் பெயரளவு வருமானத்தில் 10 சதவீத வளர்ச்சியின் அனுமானங்களில் உள்ளன என்றும் கூறியுள்ளார்.