இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் சுமாராக 2713 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இந்தியாவின் பங்குச் சந்தைகளை யெஸ் பேங்க் மற்றும் கொரோனா வைரஸ் என இரண்டு காரணிகள் சேர்ந்து புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன.
இந்த நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ். இந்த சந்திப்பில் யெஸ் பேங்க் மற்றும் கொரோனா வைரஸைப் பற்றிப் பேசி இருக்கிறார்.
யெஸ் பேங்க்
முதலில் யெஸ் பேங்கில் இருந்து தொடங்குவோம். சொன்ன படி யெஸ் பேங்குக்கு ஒரு மறுகட்டமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டோம். வரும் மார்ச் 18, 2020 மாலை 6 மணி முதல் யெஸ் பேங்கின் வாடிக்கையாளர்கள், யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து, தங்கள் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வெளியே எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்.
பயப்பட வேண்டாம்
மேலும் பேசிய ஆளுநர், யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் யாரும் பயந்து கொண்டு, யெஸ் பேங்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டெபாசிட்தாரர்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். அதோடு இந்திய வங்கிகள் வரலாற்றில் எந்த ஒரு வங்கியும் இதுவரை திவாலானது இல்லை என்பதையும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.
யெஸ் பேங்குக்கு உதவி
மேற்கொண்டு யெஸ் பேங்குக்கு உதவ வேண்டும் என்றால் கூட மத்திய ரிசர்வ் வங்கி, யெஸ் பேங்குக்கு லிக்விடிட்டி விஷயத்தில் உதவும் எனவும் சொல்லி இருக்கிறார். யெஸ் பேங்கைப் பற்றி எல்லா தைரியமும் சொல்லி விட்டு சக்தி காந்த தாஸ் கொரோனா வைரஸ் பற்றிப் பேசத் தொடங்கினார்.
இந்திய பொருளாதாரம்
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் பெரும் தொற்றுநோயான கொரோனா வைரஸில் இருந்து இந்தியா மட்டும் தப்பிக்க முடியாது. இதுவரை சுமார் 100 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று வந்திருக்கிறது. இதனால் இந்திய பொருளாதாரமும் நேரடியாக பாதிக்கப்படலாம் எனச் சொல்லி இருக்கிறார்.
பாதிப்புகள்
ஏற்கனவே இந்தியாவில் சுற்றுலா, உணவகம், ஹோட்டல், விமான சேவை என பல துறைகள் கொரோனா வவைரஸால் பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. இந்த பங்குச் சந்தைகள் மற்றும் நிதி நிறுவனங்களை பாதுகாக்க ஆர்பிஐ பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனச் சொல்லி இருக்கிறார்.