மும்பை: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்து இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு நாள்தோறும் சென்று பணிகளை கவனித்து வந்தார். இந்த சூழலில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது,
இதையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் சக்தி காந்த் தாஸ், தனக்கு கொரோனா பாதித்து இருப்பதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் தனது ட்வீட் பதிவில், அறிகுறிகள் இல்லை. இயல்பாக இருப்பதாக உண்ர்கிறேன். தனிமையில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவேன். ரிசர்வ் வங்கியில் பணிகளில் வீடியோ கான்பரன்சிங் மற்றும் தொலைபேசி மூலம் அனைத்து துணை ஆளுநர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். வழக்கமான நடத்தப்படும் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது" இவ்வாறு கூறினார்.
ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், ஆளுநருக்கு கொரோனா பாதித்தாலும் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் தொடர்ந்து செயல்படும். ரிசர்வ் வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் உள்ளனர்.
பி பி கனுங்கோ, எம் கே ஜெயின், மைக்கேல் பத்ரா மற்றும் எம் ராஜேஸ்வர் ராவ். துணை ஆளுநர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. எனவே ரிசர்வ் வங்கி மத்திய அலுவலகம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும், ஏனெனில் அது அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. அங்கு வெப்ப பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது என்றார்.