ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் அறிவிப்பு.. 2 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியீடு..!
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று மதியம் 2 மணிக்கு உலகளாவிய பணவீக்க கவலைகள் இந்தியாவின் மீட்சிக்கு சவாலாக இருப்பது குறித்து மிகவும் முக்கியமான அறிக்கையை வெளியிட உள்ளார்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி ஆளுநர் தனது உரையில் என்ன உரையாற்றுவார் என்பது தெளிவாகவும் முழுமையாகவும் தெரியவில்லை. ஆனால் கட்டாயம் பணவீக்கம் மூலம் இந்தியப் பொருளாதாரம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்புகள் தொடர்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் இன்று தனது இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தைத் துவங்க உள்ளது. அமெரிக்காவின் முடிவுகளுக்கு முன்னதாக ஆளுநரின் உரை வருவதால் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்கப் பெடரல் வங்கி இந்த நாணய கொள்கை கூட்டத்தில் 0.50 சதவீதம் வட்டியை உயர்த்த உறுதியாக உள்ளது. இதற்கான முடிவை எடுக்கவே இந்த நாணய கொள்கை கூட்டம் நடக்கிறது.
பணவீக்கம்
ஏனெனில் இந்த அறிக்கை கட்டாயம் பணவீக்கம் மூலம் இந்தியாவில் பதிவாகியுள்ள மந்த நிலை குறித்து இருக்கும் காரணத்தால் அனைத்து தரப்பினருக்கும் இது முக்கியமானதாக விளங்குகிறது. உலகம் முழுவதும் பணவீக்கத்தின் பாதிப்பு தலைவிரித்தாடும் நிலையில் ரிசர்வ் வங்கி இன்று விளக்கம் கொடுத்தால் முதலீட்டாளர்கள் முன்கூட்டியே திட்டமிட வாய்ப்பாக இருக்கும்
பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் பணவீக்கத்தின் தாக்கத்தின் காரணமாக ஏற்கனவே அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் நாட்டின் பணவீக்கம் 3 மாதங்களாக ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான பணவீக்க அளவான 6 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது.
0.25 சதவீத வட்டி உயர்வு
இதனால் இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தில் கட்டாயம் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் உயர்த்தும் எனப் பேச்சு நிலவி வருகிறது. கிட்டதட்ட 2 வருடமாக வட்டி விகிதத்தில் பெரிய மாற்றங்கள் செய்யாத நிவையில் திடீரென வட்டியை உயர்த்தினால் கட்டாயம் கடுமையான பாதிப்பு இருக்கும்.
டாலர் இண்டெக்ஸ்
மேலும் டாலர் இண்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியா ரூபாய் மதிப்பின் சரிவு, விலை உயர்வும், அதிகப்படியான இறக்குமதி பணவீக்க பாதிப்பும், பொருட்கள் பற்றாக்குறையும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு பிரிவையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் வாயிலாக RBI முக்கியமான முடிவை எடுக்க உள்ளது.