இந்தியாவில் வங்கி சேவைகள் எந்த அளவிற்கு எளிதாகி அனைத்து மக்களுக்குக் கிடைக்கிறதோ, அதே அளவிற்கு வங்கி சேவை கட்டணங்களும் அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக ஐஎம்பிஎஸ் பணப் பரிமாற்றம் செய்யும் போது 5 முதல் 6 ரூபாய் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்குச் சென்று பணம் செலுத்துவதை எளிதாக வந்த சேவை தற்போது மக்களுக்குக் கட்டணங்கள் மூலம் சுமையாக மாறியுள்ளது.
இந்த வகையில் தற்போது ஏடிஎம்-ல் இருந்து பணம் பெறுவதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி தற்போது நாட்டின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சி, பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் அறிவித்து வரும் நிலையில் தற்போது சாமானிய மக்களைப் பாதிப்பும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏடிஎம் வித்டிராவல் கட்டணம்
வருகிற ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம் வித்டிரா-விற்கான கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் 3 அல்லது 5 இலவச ஏடிஎம் வித்டிரா-விற்குப் பின்பு 4வது அல்லது 6வது வித்டிரா முதல் இப்புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
வங்கிகளின் இன்டர்சேஞ்ச் கட்டணம்
இதேபோல் வங்கிகள் செலுத்தும் இன்டர்சேஞ்ச் கட்டணம் 16 முதல் 17 ரூபாயாக அதிகரிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இக்கட்டணம் ஆகஸ்ட் 1, 2021 முதல் அலாக்கம் செய்யப்பட உள்ளது.
இன்டர்சேஞ்ச் கட்டணம் என்பது எடிஎம் கார்டு கொடுக்கும் வங்கிகள் ஏடிஎம் நிர்வாகம் செய்யும் நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் கட்டணம்.
பணம் அல்லாத ஏடிஎம் சேவைகள்
இதேபோல் பணம் பரிமாற்றம் அல்லாத பிற ஏடிஎம் சேவைகளுக்கான கட்டணத்துக்கு 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரித்துள்ளது ரிசர்வ் வங்கி. இப்புதிய கட்டணங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ஏடிஎம் நிர்வாகச் செலவுகள்
ஏடிஎம் நிர்வாகம் செய்யவும், அதற்கான சேவைகள், கட்டமைப்புகளை நிர்வாகம் செய்வதிலும் கூடுதல் செலவுகள் ஆகும் காரணமாக இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.