இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வரும் ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ செய்த ஒரு வர்த்தக முறைகேட்டை கண்டுபிடித்து சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது.
இந்திய வங்கிகளில் அடுத்தடுத்து பல வர்த்தக முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளது வெளியாகி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் நிர்வாகப் பணிகள் முதல் கணக்கு வழக்குகள், வங்கி நடைமுறைகளை கடைப்பிடிப்பது வரையில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தக் கண்காணிப்பில் இதுவரை பல வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சிக்கியது உண்டு. தற்போது இதில் எஸ்பிஐ வங்கியும் சிக்கியுள்ளது.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கியின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் கடன் வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரிசர்வ் வங்கியில் செய்த சோதனையில் இது தெரிய வந்துள்ளது.
30 சதவீத கடன்
அதாவது எஸ்பிஐ ஒரு நிறுவனத்திற்கு paid-up share capital-க்கு 30 சதவீதத்திற்கும் அதிகமான கடன் அளிக்கும் போது அந்த நிறுவனத்தின் பங்குகளை அடமானமாகப் பெற்றுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு முறனானது. இந்த முறைக்கேடுக்காக ரிசர்வ் வங்கி சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆய்வு
எஸ்பிஐ வங்கியின் மார்ச் 21, 2018 மற்றும் மார்ச் 31, 2019 காலகட்டத்தின் முடிவின் நிதி நிலையை ஆய்வு ரிசர்வ் வங்கி ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் 30 சதவீதத்திற்கும் அதிகமான கடன் அளிக்கும் நிறுவனத்தின் பங்குகளை அடமானமாகப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் பிரிவு 19 துணை பிரிவு 2 விதிமுறையை மீறியுள்ளது என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
விதிமீறல்
இந்த விதிமீறல்-க்காக ஆர்பிஐ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீது சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது. இந்த விதிமீறல் மூலம் வங்கிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை, ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம்.