டெல்லி: இந்திய வங்கிகளின் தோராய வாராக் கடன், கடந்த செப்டம்பர் 2019 கணக்குப் படி 9.1 சதவிகிதமாக குறைந்து இருப்பதாகச் சொல்லி, மத்திய அரசு வயிற்றில் பால் வார்த்தது ஆர்பிஐ.
ஆனால் அந்த சந்தோஷம் அடுத்த ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. நேற்று (டிசம்பர் 27, 2019 வெள்ளிக்கிழமை) ஆர்பிஐ Financial Stability Report என்கிற பெயரில் இந்திய பொருளாதாரத்தின் நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிக்கையில் தான் இந்தியாவுக்கு இன்னும் மோசமான காலம் பாக்கி இருப்பதாக, எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. அதோடு 5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம் எனவும் எச்சரித்து இருக்கிறது.
என்ன பிரச்னை
சமீபத்தில் தான், உலகின் டாப் 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் திரட்டி, வெளியிட்டு இருக்கிறது. உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்கிறது எனச் செய்திகள் வெளியாயின.
விளக்கம்
அதாவது, இந்தியா 100 ரூபாய் மொத்தக் கடன் கொடுத்து இருக்கிறார்கள் என்றால், அதில் 9.3 ரூபாய் மோசமான கடனாக தேங்கி நிற்கிறது. இந்த மோசமான கடன்களை செயல்படாத கடன்களாகச் சொல்லலாம். நம் எளியோர் மொழியில் என்பிஏ (NPA - Non Performing Asset)வாரா கடன் என்று சொல்லலாம்.
விவரம்
கடந்த செப்டம்பர் 2015-ல் இந்தியாவின் மோசமான கடன்கள் அளவு 5.1 சதவிகிதமாக இருந்தது. இது
செப்டம்பர் 2016-ல் 09.1 சதவிகிதமாகவும்
செப்டம்பர் 2017-ல் 10.2 சதவிகிதமாகவும்
செப்டம்பர் 2018-ல் 10.8 சதவிகிதமாகவும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு இருக்கிறது. இதற்கு நேர் மாறாக இத்தாலியின் மோசமான கடன்கள் அளவு கணிசமாக குறைந்து 2019-ம் ஆண்டில் முதலிடத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்து, இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிட்டது.
செப்டம்பர் 2019-ல் நிலை
சமீபத்தில் வெளியான செய்திகள் மற்றும் ப்ளூம்பெர்க் தரவுகள் படி, 2019-ம் ஆண்டில், இந்தியாவின் மோசமான கடன்களின் அளவு 9.3 சதவிகிதமாக குறைந்தும், மோசமான கடன்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இருப்பதாக ப்ளூம்பெர்க் தரவுகளே சொல்கின்றன. இதே தரவைத் தான் ஆர்பிஐயும் சொல்கிறது.
ஆர்பிஐ முதல் குண்டு
இப்போது, மத்திய ரிசர்வ் வங்கியின் Financial Stability Report-ல் இந்தியாவின் மோசமான கடன்கள் அடுத்த செப்டம்பர் 2020-ல் 9.9 சதவிகிதமாக அதிகரிக்கும் எனச் சொல்லி மத்திய அரசை கலக்கத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இது தான் முதல் குண்டு. சரி ஏன் இந்தியாவின் மோசமான கடன்கள் 9.9 சதவிகிதமாக அதிகரிக்கும்..?
காரணங்கள்
இந்திய வங்கிகளுக்கு புதிதாக வாரா கடன்கள் அதிகரிப்பது, புதிதாக கடன்கள் கொடுப்பதில் பெரிய வளர்ச்சி காணாமல் இருப்பது போன்றவைகளை சுட்டிக் காட்டி இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் மோசமான கடன்களின் அளவு, வரும் மார்ச் 2020-க் குறையும் எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இப்போது செப்டம்பர் 2020-ல் மோசமான கடன்கள் 9.9 %-மாக அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆர்பிஐ இரண்டாம் குண்டு
ஆர்பிஐ, அரசு வங்கிகளை ஆராய்ந்த போது, வரும் செப்டம்பர் 2020-ல், இந்திய அரசு வங்கிகளின் தோராய வாரா கடன் (Gross NPA) 13.2 சதவிகிதமாக அதிகரிக்கும் என ஒரு பெரிய குண்டைப் போட்டு இருக்கிறார்கள். தனியார் வங்கிகள் கூட செப்டம்பர் 2020-ல் தோராய வாராக் கடன் 4.2 சதவிகிதத்தை தொடும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அணு குண்டு
வரும் செப்டம்பர் 2020-ல், சுமாராக 3 இந்திய வங்கிகளுக்கு தேவையான பணம் இல்லாமல் போகலாம். உலக பொருளாதார காரணிகள் கொஞ்சம் மோசமானால் கூட சுமாராக 5 வங்கிகள், தங்களுக்குத் தேவையான பணம் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகலாம் என ஆர்பிஐ பொது வெளியில் போட்டு உடைத்து இருக்கிறது. ஆனால் எந்த வங்கிகள் எல்லாம் அந்த ரிஸ்கில் இருக்கிறது என குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
உஷார் மக்களே
எனவே மக்களே எதற்கும் உஷாராக இருங்கள். பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட நெருக்கடியைச் சரி செய்ய, பணம் போட்ட வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் தவித்ததையும் நாம் செய்தியாக படித்து இருக்கிறோம். எனவே உஷாராக இருங்கள் மக்களே.