2016-ம் ஆண்டில், மத்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் படி, பணக் கொள்கைக் கமிட்டி (Monetary Policy Committee) அமைக்கப்பட்டது.
அன்றில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மத்திய ரிசர்வ் வங்கி, தன் பணக் கொள்கைக் கூட்டத்தை சரியாக நடத்தி வந்தது.
இந்த முறை, 2020 செப் 29, செப் 30, அக் 01 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய பணக் கொள்கைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டதை பத்திரிகைகளில் படித்து இருப்போம். இப்படி ஆர்பிஐயின் பணக் கொள்கைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றது தி இந்து பத்திரிகை.
6 உறுப்பினர்கள்
ஆர்பிஐயின், இந்த பணக் கொள்கைக் கமிட்டியில், மொத்தம் 6 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பணக் கொள்கைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 4 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். ஆனால் அக்டோபர் 01-ம் தேதி, ஆர்பிஐயின் பணக் கொள்கை கமிட்டியில், 3 உறுப்பினர்கள் தான் இருப்பார்கள். மற்ற 3 உறுப்பினர்களுக்கான காலம், செப்டம்பர் 30 உடன் நிறைவடைகிறது. எனவே கூட்டத்தை கூட்ட முடியாத சூழலில் சிக்கியது ஆர்பிஐ.
ஆர்பிஐ தரப்பில் இருந்து கடிதம்
இப்படி ஒரு சிக்கல் வந்துவிடக் கூடாது என்கிற தொலை நோக்கு பார்வை உடனேயே, சில மாதங்களுக்கு முன்பே, ஆர்பிஐ, தன் பணக் கொள்கை கமிட்டியில் இருக்கும், அரசு நியமித்த 3 உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாறாக புதிய உறுப்பினர்களை நியமிக்க, மத்திய பொருளாதார விவகாரத் துறைச் செயலர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது மத்திய அரசு.
புதிய உறுப்பினர்கள்
சஷாங்க் பிடே, அசிமா கோயல், ஜெயந்த் வர்மா ஆகியோர்களை ஆர்பிஐயின் பணக் கொள்கை கமிட்டி உறுப்பினர்களாக, நேற்று (05 அக்டோபர் 2020) நியமித்து இருக்கிறது மத்திய அரசு. இவர்கள் நான்கு ஆண்டு காலத்துக்கு ஆர்பிஐயின் பணக் கொளகை கமிட்டியின் உறுப்பினர்களாக இருப்பார்களாம்.
7 - 9 வரை எம் பி சி கூட்டம்
எனவே, வரும் அக்டோபர் 07 முதல் அக்டோபர் 10 வரை, பணக் கொள்கைக் கூட்டத்தை நடத்த இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்தே சொல்லி இருக்கிறார்கள். இந்த முறை பணக் கொள்கைக் கூட்டத்தில், வட்டி விகிதங்கள் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முக்கியத்துவம்
கடந்த ஜூன் 2020 காலாண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, வரலாறு காணாத அளவுக்கு 23.9 சதவிகிதம் சரிந்து இருப்பதால், மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த பணக் கொள்கைக் கமிட்டி கூட்டம், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக, இன்னமும் ஒரு சுமூகமாக தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.