வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் கிரெடிட் கார்டினை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதோ கூடாது என ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு வழங்குனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதையும் மீறி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செயல்பட்டால், இருமடங்கு லாபம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடைமுறை வரவிருக்கும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கியை அணுகலாம்
மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவை தொகையை வசூலிக்கும்போது மிரட்டல் அல்லது மோசமான செயலில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. அப்படி மீறி பிரச்சனையில் ஈடுபட்டால், கார்டு உரிமையாளர்கள் ரிசர்வ் வங்கியின் குறை தீர்ப்பாளரை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அணுகப்படாத கார்டுகளுக்கு தடை
மேலும் ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குவது தொடர்பான கோரிக்கை இல்லாத நிலையில், புதிய கார்டுகளை வழங்குதல், அல்லது ஏற்கனவே இருக்கும் கார்டுகளை மேம்படுத்துதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறைகள் வங்கிகள், பேமெண்ட் பேங்குகள், கோ ஆப்ரேட்டிவ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. ஆக கார்டு வழங்குனர்கள் நிச்சயம் ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் டெபிட் கார்டு?
டெபிட் கார்டினை வங்கிகள் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே வழங்க வேண்டும். பண வரவு அல்லது கடன் கணக்கு வைத்திருப்போருக்கு டெபிட் கார்டுகள் வழங்க கூடாது. எனினும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளுடன் வழங்கப்படும் ஓவர் டிராப்ட் வசதியை டெபிட் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக பல விதிமுறைகளை கொடுத்துள்ளது. நிச்சயம் இது வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும்.