வங்கிகள் நாம் வாங்கும் கடன்களுக்கு இரண்டு விதமாக வட்டி விதிக்கின்றன. ஒன்று மிதக்கும் வட்டி , இது அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது , மற்றொன்று நிலையான வட்டி இது கடன் முடியும் காலம் வரை மாறாது. இந்திய ரிசர்வ் வங்கி மிதக்கும் வட்டி விகிதத்தில் (Floating-rate loans) கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் முறையை மாற்ற வேண்டியிருக்கும்.
ஆர்பிஐ இது தொடர்பாக Interest Rates on Loans and Advances Directions, 2026 என்ற புதிய விதிமுறையை பரிந்துரை செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின் படி, தற்போதுள்ள கடன்களை புதிய கட்டமைப்புக்கு மாற்றும் போது, கடன் பெற்ற வாடிக்கையாளரிடம் முறையான அனுமதியை வங்கிகள் பெற வேண்டும். வங்கிகள் தன்னிச்சையாகவோ அல்லது வாடிக்கையாளருக்குத் தெரியாமலோ கடனின் அடிப்படை விகிதத்தை (benchmark) மாற்ற முடியாது.

இந்த மாற்றத்தின் போது, வாடிக்கையாளரிடம் எந்தவிதமான கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்க முடியாது. மேலும், மிக முக்கியமான விஷயமாக, இந்த மாற்றத்தினால் வாடிக்கையாளருக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம், மாறுதலுக்கு முன்பு இருந்த வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கும்.
இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டால், ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும். தற்போதுள்ள கடன்களை, ஏப்ரல் 1, 2029க்குள் இந்த புதிய முறைக்கு மாற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது ஃபுளோட்டிங் எனப்படும் மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை வாங்கியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக மிதக்கும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு, வட்டி விகிதம் என்பது பெஞ்ச்மார்க் (Benchmark) மற்றும் ஸ்பிரெட் (Spread) ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகவே இருக்கும். எனவே, பெஞ்ச்மார்க்கில் செய்யப்படும் எந்த மாற்றமும் வாடிக்கையாளரின் ஈஎம்ஐ மற்றும் கடன் செலுத்தும் கால அளவை பாதிக்கும். இதை கருத்தில் கொண்டு, கடன் ஒப்பந்தத்தில் பெஞ்ச்மார்க், அதை மாற்றும் இடைவெளி மற்றும் தேதி ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. பொதுவாக, வட்டி மாற்றங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறைக்கு மேல் இருக்கக்கூடாது என கூறியுள்ளது.
வணிக வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்கள் மற்றும் MSME கடன்கள் இனி கட்டாயம் ஒரு External Benchmark உடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் வட்டி விகிதங்கள் நிர்ணயிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு தற்போதைக்கு ஒரு வரைவு மட்டுமே. இது ஆலோசனை கட்டத்தில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை பெற்ற பிறகு, இறுதி விதிகள் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications

