இன்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற நிலையே நீடித்து வருகிறது. ஏற்கனவே இந்திய மோசமான சரிவில் இருந்து, தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நடக்கும் இந்த முதல் கூட்டத்தில் இன்று வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ஆனால் இன்று நடைபெற்ற கூட்டத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில், எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது.
கடந்த முறையும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், ஆர்பிஐ தன் ரெப்போ விகிதத்தினை 4 சதவீதமாக அப்படியே வைத்திருந்தது. கடந்த மார்ச் 2020ல் 0.75% வட்டி விகிதத்தினையும், மே மாதத்தில் 0.40% வட்டியினை குறைத்திருந்த நிலையில், கடந்த முறை வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
அதோடு ரிவர்ஸ் ரெபோ விகிதமும் மாற்றமில்லாமல் 3.3 சதவீதமாக தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால், வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்திலும், மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
வட்டி விகிதங்கள் எவ்வளவு?
இதற்கிடையில் இன்று நடந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் வழக்கம்போல 4% ஆகவே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவே தொடரும். பேங்க் ரேட் 4.25% ஆகவே தொடரும். எம் எஸ் எஃப் விகிதமும் 4.25% ஆகவே தொடரும் என அறிவித்துள்ளது.
ரியல் ஜிடிபி கணிப்பு
அதோடு சர்வதேச் பொருளாதாரம் சீராக மீண்டு வர ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அது நிலையற்றதாக உள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் ரியல் ஜிடிபி விகிதம் நடப்பு நிதியாண்டில் 10.5% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. அதோடு கொரோனா தடுப்பூசி என்பது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான முக்கிய ஆயுதமாகும்.
மீட்சியில் நிச்சயமற்ற தன்மை
புதிய தொற்று பரவல் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி மூலம் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் வலுப்பெற்றுள்ளன. எனினும் சமீபத்திய இரண்டாம் கட்ட தொற்று பொருளாதார மீட்சியில் நிச்சமயற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.