இந்தியாவை மட்டும் அல்லாமல் இன்று உலக நாடுகளைப் பயமுறுத்தும் முக்கியமான பிரச்சனையாகப் பணவீக்கமும், விலைவாசி உயர்வும் உள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த 3-ன் தாக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கொரோனா தொற்று பாதிப்பிற்கு இணையாகக் கீழே தள்ளுகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் விரைவில் ரெஷிசன் வரும் எனச் சந்தை கணிப்புகள் இருக்கும் நிலையில் நாணய மதிப்பில் பெரும் சரிவை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இருந்து மீண்டு வர கட்டாயம் அதிரடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதைத் தான் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி செய்யத் திட்டமிட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த நாணய கொள்கை கூட்டம் இந்த வாரம் நடக்க உள்ள நிலையில் கூட்டத்தில் ஏற்கனவே அறிவித்துப் போலவே கட்டாயமாக வட்டி உயர்வு இருக்கும். ஆனால் எவ்வளவு உயரும் என்பது தான் இப்போதையே கேள்வியாக உள்ளது.
வட்டி உயர்வு பாதிப்பு
ஆர்பிஐ-யின் வட்டி உயர்வு வங்கியில் கடன் வாங்கிய அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் குறிப்பாக அவசர தேவைக்காகத் தங்க நகை அடமானமாக வைத்து கடன் வாங்கியவர்கள் முதல் தொழிலை விரிவாக்கம் செய்ய வங்கிக்குப் பல மாதம் நடையாய் நடந்து கடன் வாங்கியவர் வரையிலும், புதிதாகக் கடன் வாங்க போகிறவரையும் பாதிக்கும்.
நாணய கொள்கை கூட்டம்
இந்நிலையில் ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் 0.40 சதவீதம் உயர்த்திவிட்டு, ஆகஸ்ட் கூட்டத்தில் 0.35 சதவீதம் வரையில் உயர்த்தலாம் அல்லது அடுத்த வார கூட்டத்தில் 0.50 சதவீதமும் ஆகஸ்ட் கூட்டத்தில் 0.25 சதவீதமும் உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
0.75 சதவீத வட்டியை உயர்வு
எப்படி இருந்தாலும் இந்த 2 கூட்டத்தில் ஆர்பிஐ 0.75 சதவீத வட்டியை உயர்த்துவது கட்டாயம், ஆனால் உலக நாடுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு எப்போது எவ்வளவு உயர்த்த வேண்டும் என்பதை ஆர்பிஐ-யின் நாணய கொள்கை குழு முடிவு செய்யும்.
மக்கள் புலம்பல்
ஏற்கனவே வணிக வங்கிகள் ஆர்பிஐ அறிவித்த 0.40 சதவீத வட்டி விகிதத்தைக் கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்துவிட்டு, வங்கி வைப்பு நிதிக்குச் செய்யாமல் இருப்பதாக மக்கள் புலம்பி வரும் நிலையில் தற்போது திட்டமிடப்பட்டு உள்ள 0.75 சதவீத வட்டி கடன் வாங்கியவர்களை அதிகளவில் பாதிக்கும்.