கொரோனா-வால் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுப் பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்திற்கே போராடி வந்த சூழ்நிலையில், தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தும் சுமை இருக்கக் கூடாது என முடிவு செய்த ரிசர்வ் வங்கி 3 மாத கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த வேண்டாம் எனச் சலுகை அளித்தது. இதன் பின்பு அதை 6 மாதமாக உயர்த்து மார்ச் 1 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரையில் அறிவித்தது.
இந்த 5 மாத சலுகை தற்போது முடியும் தறுவாயில், கொரோனா தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி மீண்டும் கடன் சலுகை அறிவிக்குமா என்ற கேள்வி அனைத்துத் தரப்பு மக்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி மீண்டும் கடன் சலுகையை அறிவிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏன் தெரியுமா..?
ஆகஸ்ட் 31
இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த 6 மாத கடன் சலுகை தற்போது முடிவடையும் நிலையில், மீண்டும் சலுகை காலத்தை அதிகரித்தால் கடன் பெற்றவர்களின் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் பழக்கம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
அதேபோல் கொரோனா-வால் கடன் பெற்றவர்களின் பாதிப்பை முழுமையாக ஆராயாமல் தொடர்ந்து சலுகையை அளித்தால் வங்கி நிதிநிலை பெரிய அளவில் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், வங்கியின் வராக்கடன் அளவு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மீண்டும் கடனுக்கான சலுகையை அளிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருக்கும் எனத் தெரிகிறது.
முன்னணி வங்கிகள்
இந்திய வர்த்தகச் சந்தை கொரோனா-வால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையிலும் இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஹெச்டிஎப்சி வங்கி தலைவர் தீபக் பாரிக் மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் ஆகியோர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்களிடம் கடன் சலுகையை நீட்டிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தணிக்கை
இந்தக் கொரோனா காலகட்டத்தில் கடன் சலுகை பெற்ற தனிநபர் மற்றும் வர்த்தகங்களின் கணக்கு மற்றும் கடன் நிலுவைகளைத் தணிக்கை மற்றும் மறுசீரமைப்புச் செய்து தீர்வுக் கான வேண்டும். மேலும் கடன் சலுகைக்குப் பின் அவர்களது பணப்புழக்கத்தைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாக உள்ளது என ரிசர்வ் வங்கி சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
இதோடு ஆபத்தில் இருக்கும் கடன்களை எப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் ரிசர்வ் வங்கி தனிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வட்டி வசூல்
இந்தக் கடன் சலுகை காலகட்டத்தில் செலுத்த வேண்டிய வட்டியை வங்கிகள் தனிக் கடன் கணக்குக் கொண்டு வசூலிப்பதா, கடனுக்கான வட்டிக்குச் சலுகை கொடுப்பதா, வட்டி தொகை செலுத்துவதற்கான நாள்-ஐ மறுசீரமைக்கப்படுவதா என்பது அனைத்தும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வடிவமைப்பு மூலமும் கடன் பெற்றுள்ளவர்களின் கடன் அளவு, கடன் வகை ஆகியவற்றை மையப்படுத்தி வங்கிகள் முடிவெடுக்கும்.
நீட்டிப்பு
இந்தியப் பொருளாதாரம் மேசமான நிலையில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு மீண்டும் கடன் சலுகையை நீட்டிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.