தென் ஆசிய நாடுகளில் அடுத்தடுத்து இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் பொருளாதாரம் வீழ்ந்து வரும் நிலையில், இந்தியா மட்டும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறதா என்றால்..? இந்திய பொருளாதாரமும் சில தடுமாற்றங்களை எதிர்கொண்டு தான் வருகிறது.
இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு தனது வரலாற்று உச்ச அளவில் இருந்து 11 சதவீத சரிந்துள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவின் மொத்த அன்னிய செலாவணி இருப்பு 642 பில்லியன் டாலராக இருந்தது, இது 573 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இதோடு இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு முறை தனது பென்ச்மார்க் வட்டியான ரெப்போ விகிதத்தை உயர்த்தினாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் 80 ரூபாய்க்கு அருகில் தான் உள்ளது.
இந்த நிலையைச் சமாளிக்க 2013ல் நடந்த அதே சம்பவம் மீண்டும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிதி நெருக்கடி
2008 பொருளாதார நிதி நெருக்கடியைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து வரும்போது இந்திய வர்த்தகச் சந்தையில் அதிகப்படியான டாலர் தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையைத் தீர்க்க அப்போத காலகட்ட மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து டாலரை நேரடியாக வாங்காமல் மாற்று வழியில் கைப்பற்றியது.
Fragile Five economies விமர்சனம்
2013 ஆண்டின் மத்தியில் இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில், துருக்கி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகப்படியான டாலர் தேவை இருந்தது. இந்த நெருக்கடியை மோர்கன் ஸ்டான்லி Fragile Five economies எனப் பெயரிட்டது மறக்க முடியாத நிகழ்வு. இந்தச் சூழ்நிலையில் தான் மத்திய அரசு நாட்டின் ரூபாய் மதிப்பு சரிவால் என்ஆர்ஐ-கள் உதவியுடன் டாலரை கைப்பற்றியது.
என்ஆர்ஐ
அன்றும் சரி இன்றும் சரி இந்தியாவுக்குப் பக்கபலமாக இருப்பது NRI-கள் என்றால் மிகையில்லை, 2013ல் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் டாலர் நாணயத்தில் டெப்பாசிட் செய்ய மிகப்பெரிய அளவிலான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் கவர்ச்சிகரமான வட்டி மட்டும் அல்லாமல் டெப்பாசிட் முடிக்கும் போது ரூபாயில் பணத்தைப் பெறலாம்.
வெளிநாட்டு வங்கி
மேலும் என்ஆர்ஐ-க்கள் இந்தப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் மலிவான வட்டியில் கிடைக்கும் கடன் பெற்று இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்யும் காரணத்தால் வெளிநாட்டு வங்கிகளுக்கும் இதன் மூலம் கூடுதலான வர்த்தக வாய்ப்பாகப் பார்க்கிறது.
டாலர் இருப்பு
இதன் மூலம் இந்திய அரசு பல மில்லியன் டாலர் மதிப்பிலான டாலர் இருப்பைப் பெற்று டாலர் தேவையைச் சமாளித்தது, இந்தியாவின் இத்திட்டம் இன்றளவும் பல பொருளாதார வல்லுனர்களால் பாராட்டப்படுகிறது.
மத்திய அரசு
மேலும் மத்திய அரசு இத்தகைய முறையில் பணத்தைப் பெறுவதால் அதைக் கடனாகப் பெறுவதைத் தவிர்க்க முடியும், அதேவேளையில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அரசு தன் விருப்பத்தின் பெயரில் செலவு செய்ய முடியும் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லை.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
இன்றைய சூழ்நிலையில் அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையிலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து 80 அளவிலேயே இருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி சரிவை கட்டுப்படுத்த 2013 திட்டத்தைச் செயல்படுத்தலாம், ஆனால் இந்த நிலைக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் பிளான் B திட்டமிடவும் வாய்ப்புகள் உள்ளது.