கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் மத்திய அரசு ஊக்கத்திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாட்டின் மோசமான வர்த்தக நிலையை உணர்ந்து மத்திய அரசுக்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். இதில் ரெப்போ விகிதத்தைக் குறைக்க மறுத்த ரிசர்வ் வங்கி நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் சுமார் 30000 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை
2020-21 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி அளவு முதல் காலாண்டு -18.5%, 2வது காலாண்டு -7.9%, 3வது காலாண்டு -7.2%, 4வது காலாண்டு -6.6% அளவில் சரிந்த மொத்த நிதியாண்டுக்குமான பொருளாதார வளர்ச்சி அளவீடு -7.3 சதவீதமாக இருந்தது.
2021-22ஆம் நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி
இந்நிலையில் நடப்பு நிதியாண்டான 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9.5 சதவீதமாக இருக்கும் எனத் தனது கணிப்பை 10.5 சதவீதத்தில் இருந்து குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி புதிய ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது
15,000 கோடி ரூபாய் ஊக்க திட்டம்
கொரோனா காலத்தில் தொடுதல் பாதிப்பு கொண்ட துறைகளுக்கு உதவி செய்யும் வகையில் 15,000 கோடி ரூபாய் அளவிலான கடன் உதவி அறிவித்துள்ளது முக்கியமானதாக விளங்குகிறது. அதாவது மக்கள் நேரில் சென்று பொருட்கள் அல்லது சேவை பெறும் துறைகள் இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகளவிலான பாதிப்பு அடைந்துள்ளது.
வட்டி தளர்வுகள் உடன் கடன்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட துறைக்கு 15,000 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தத் தொகையை வங்கிகள் வாயிலாக வட்டி தளர்வுகள் உடன் கடன் அளிக்க ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
பெரிய உதவி
இதன் மூலம் கொரோனா தொற்று மூலம் வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட ஹோட்டல், ஸ்பா, ஆட்டோமொபைல் சேவை நிறுவனங்கள், ஸ்பா, உணவகம் போன்ற அனைத்து நிறுவனங்களும் இந்தத் தொகையைக் கொண்டு கடனை பெறலாம்.
பாதிக்கப்பட்ட SME நிறுவனங்கள்
இதேபோல் உற்பத்தித் துறையில் இருக்கும் SME நிறுவனங்களுக்கு உதவிட 16,500 கோடி ரூபாய் அளவிலான தொகையை SIDBI மூலம் சந்தைக்குக் கொண்டு வர உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
இதேபோல் வங்கிகள் கடனை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 25 கோடி ரூபாய் அளவிலான கடனை மட்டுமே மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 50 கோடி ரூபாய் அளவிலான கடனை மறுசீரமைப்புச் செய்ய ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அரசு பத்திர விற்பனை
GSAP வாயிலாக ஜூன் 17ல் 40000 கோடி ரூபாய்க்கும், 2வது காலாண்டில் 1.2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அரசு பத்திரங்கள் வர்த்தகம் செய்ய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி அதிகளவிலான தொகையை நாட்டின் வர்த்தகத்திற்காகப் பெற முடியும்.
பணவீக்கம் பெரிய பிரச்சனை
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக விளங்கும் பணவீக்கம் கொரோனா தொற்று உடன் தொடர்புடையதாக மாறியுள்ளது. விலைவாசி பணவீக்கத்தை மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் நுகர்வோர் அளவீட்டையும் குறைத்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.