இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியது. இக்கூட்டத்தில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் தொடர்ந்து சரிந்து வரும் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளது.
அமெரிக்கா தனது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 0.75 சதவீதம் வரையிலான பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது. இந்த நிலையில் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில் ஆர்பிஐ இந்த நாணய கொள்கை கூட்டத்தில் எவ்வளவு வட்டியை உயர்த்தும்..? இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு..?
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி தனது இரு மாத நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியுள்ள நிலையில், உலகின் பிற அனைத்து மத்திய வங்கிகளின் முக்கியக் குறிக்கோளாக இருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தான் ஆர்பிஐ இன்று MPC கூட்டத்தில் முடிவுகளை எடுக்க உள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
ஆர்பிஐ ஏற்கனவே பல முறை வட்டி விகிதங்களை உயர்த்திக் கொரோனாவுக்கு முந்தையை அளவீட்டை காட்டிலும் அதிக வட்டி விகிதத்தை அறிவித்துள்ள நிலையில், இன்று துவங்கியுள்ள நாணய கொள்கை கூட்டத்தில் 0.30 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரையில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0.50 சதவீத வட்டி விகிதம்
கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ 50 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.50 சதவீத வட்டி விகிதத்தை உயர்த்தி ரெப்போ விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்ந்தது. இது கொரோனா தொற்றுக்கு முந்தைய அளவான 5.15 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமான அளவாகும்.
டிமாண்ட் அளவு குறையும்
வட்டி விகிதத்தை உயர்த்தும் போது சந்தையில் டிமாண்ட் அளவு குறையும், இதனால் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியும் என்பது தான் இதன் அடிப்படையான ஐடியா. மேலும் உலக நாடுகளின் சந்தை போக்கிற்கு இணையாக ஆர்பிஐ வங்கியும் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
ஆர்பிஐ நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதம் மற்றும் அதற்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் முதல் 3 காலாண்டில் பணவீக்க அளவு 6 சதவீதத்திற்கு மேலாகவே உள்ளது.
மக்கள்
வட்டி விகிதம் உயரும் போது பொதுவாக அனைத்துக் கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும் இதனால் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் ஈஎம்ஐ தொகை அதிகரிப்பது மட்டும் அல்லாமல், புதிதாக வாங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும்.