இந்திய ரூபாய் நோட்டு வரலாற்றில் முதல்முறையாக, காகிதத்தால் ஆன ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் போன்ற சிறப்பு பொருளால் ஆன நோட்டுகளை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. சிலவாரங்களுக்கு முன்னர் ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாறுகின்றன என தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்பிஐ டெண்டர் கோரியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க உலகளாவிய அளவில் தகுதியுள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை (Expression of Interest - EoI) கோரியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே காகிதத்தால் ஆன ரூபாய் நோட்டுகள் மட்டும் தான் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் முதன்முறையாக பிளாஸ்டிக் நோட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பாலிமர் நோட்டுகளுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய Opacified பாலிமர் தாள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என அறிவித்துள்ளது.
தற்போது உடனடித் தேவைக்காக 68,000 ரீம் பாலிமர் தாள்கள் தேவைப்படுகின்றன. தலா 34,000 ரீம்கள் வீதம் இரண்டு வெவ்வேறு மதிப்புடைய நோட்டுகளுக்காக இவை கோரப்பட்டுள்ளன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால், எதிர்காலத்தில் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேச பாதுகாப்பு கருதி இந்த டெண்டரில் மிக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். சீனா அல்லது பாகிஸ்தானில் தங்களுக்கு தொழில்முறை செயல்பாடுகள் இருந்தால், அவற்றை இந்திய ஒப்பந்தத்திலிருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்த வேண்டும், இந்த ஒப்பந்தத்திற்காக தேவைப்படும் மூலப்பொருட்களை அந்த இரு நாடுகளிலிருந்தும் கொள்முதல் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்காக தயாரிக்கப்படும் இந்த சிறப்பு பாலிமர் தாள்களை வேறு எந்த மூன்றாம் நாட்டிற்கும் வழங்க கூடாது, தகுதியடைய, விண்ணப்பதாரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய வங்கிகள் அல்லது நோட்டு அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு பாலிமர் தாள்களை வழங்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என கூறியுள்ளது.
காகித நோட்டுகளை விட பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக உறுதியானவை. இவை தேய்மானம் மற்றும் கிழிதலுக்கு எதிராக அதிக எதிர்ப்புத் திறன் கொண்டவை என்பதால், நீண்ட காலம் உழைக்கும். இதனால் நோட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. ரிசர்வ் வங்கியின் 2025-26 அறிக்கையின்படி, நோட்டு அச்சடிக்கும் செலவு முந்தைய ஆண்டை விட கால் பங்கு குறைந்து 4,875 கோடியாக உள்ளது.
அச்சடிப்பு செலவு குறைந்தாலும், புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு மார்ச் 2026 நிலவரப்படி 12% அதிகரித்து 41.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும், ரொக்க பணத்திற்கான தேவை இந்தியாவில் குறையவில்லை என்பதை இது காட்டுகிறது. இதனால் தான் ரூபாய் நோட்டுக்கு பதில் பிளாஸ்டிக் நோட்டுகளை கொண்டு வர ரிசர்வ் வங்கி ஆர்வம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications

