இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 5 ஆம் தேதி துவங்கியது. இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இக்கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் அமெரிக்காவின் பணவீக்கம், வேலைவாய்ப்புகள் தரவுகள், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குச் சாதகமாக மாறி வரும் நிலையில் வட்டி விகித உயர்வின் வேகத்தையும் குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டைத் தான் ஆர்பிஐ இன்று கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி
டிசம்பர் 5 ஆம் தேதி துவங்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு சந்தை நிலவரத்தைப் பொருத்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
கணிப்பு
இதன் மூலம் இன்று வெளியிடப்படும் முடிவுகளில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
பெரும்பாலான நிதி அமைப்புகள் ஆர்பிஐ இக்கூட்டத்தில் 0.25-0.35 சதவீதம் வரையிலான ரெப்போ விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் நடப்பு நிதியாண்டுக்கு இதுதான் கடைசி வட்டி விகித உயர்வாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
ரெப்போ விகிதம்
இந்த வட்டி விகித உயர்வின் மூலம் இனி வங்கிகள் கடன் காலத்தை அதிகரிப்பதை நிறுத்தி விட்டு ஈஎம்ஐ தொகையை அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆர்பிஐ-யின் இந்த வட்டி உயர்வு மூலம் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குப் பர்ஸ் ஓட்டை ஆக உள்ளது.
வேகம் குறைப்பு
இதன் மூலம் ஆர்பிஐ முந்தைய கூட்டத்தைப் போல் அதிகப்படியாக 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தாமல் குறைவான அளவிலேயே வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. சொல்லப்போனால் அமெரிக்க மத்திய வங்கி முடிவுடன் இந்திய மத்திய வங்கி ஒத்திசைக்க உள்ளது.
தடாலடி உயர்வு
ரிசர்வ் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 0.35 சதவீதம் வரையில் உயர்த்தும் எனக் கணிக்கப்படும் நிலையில் 5.9 சதவீதமாக இருக்கும் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயரும். இந்திய ரிசர்வ் வங்கி மே மாதத்தில் இருந்து தனது ரெப்போ விகிதத்தைச் சுமார் 1.9 சதவீதம் அதிகரித்துப் பல வருட சரிவில் இருந்த 4 சதவீத ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
மத்திய அரசு சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 13.5 சதவீதமாக இருந்தாலும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதமாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.இந்த சரிவுக்கு ஆர்பிஐ அறிவித்த வட்டி விகித உயர்வு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
உலக வங்கி கணிப்பு
இதேபோல் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் உலக வங்கி வெளியிட்ட கணிப்பில் இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீட்டை நடப்பு நிதியாண்டுக்கு 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ரீடைல் பணவீக்கம்
உலக வங்கியின் அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பணவீக்கத்தை அதன் இலக்கு வரம்பான 2% முதல் 6% விட அதிகமாக இருக்கும் நிலையில், இதை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.