உலக நாடுகள் பணவீக்கத்தின் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி முடிவடைந்துள்ள நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார்.
நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் விலைவாசி உயர்வு குறித்தும், பணவீக்கம் உயர்வுக்கு அதிகளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய சந்தையில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதேபோல் சமையல் எண்ணெய் மீது இருக்கும் விலை உயர்வு தாக்கம் அடுத்தச் சில மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவித்தார்.
சில்லறை பணவீக்கம்
இந்த நிலையில் 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த 4.5 சதவீதத்தை, 5.7 சதவீதமாக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் பணவீக்கம் முதல் காலாண்டில் 6.3%, 2வது காலாண்டில் 5%, 3வது காலாண்டில் 5.4%, 4வது காலாண்டில் 5.1% ஆக இருக்கும் என ஆர்பிஐ தனது கணித்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
இந்தியாவில் பணவீக்கம் உயர்வுக்கு அடிப்படை காரணமாக விளங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலராக இருந்தால், 2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 16.2%, 2வது காலாண்டில் 6.2%, 3வது காலாண்டில் 4.1%, 4வது காலாண்டில் 4% ஆக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
ஜிடிபி பணவீக்கம்
இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவை 7.8 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதேவேளையில் பணவீக்கமும் 4.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது முதலீட்டு சந்தையைக் கட்டாயம் பாதிக்கும்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதத்தை 4% ஆகவும், MSF மற்றும் வங்கி விகிதம் 4.25% ஆகவும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
ஆனால் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.40% அதிகரித்து 3.75% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாத வங்கிகள் வட்டியை உயர்த்த வாய்ப்பு உள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் உயர்வு மூலம் வணிக வங்கிகளில் உபரியாக இருக்கும் பணம் ஆர்பிஐ-க்கு செல்ல வாய்ப்பு உண்டு.


Click it and Unblock the Notifications