ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கி 8 தேதி கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் முதல் முறை இரு மாத நாணய கொள்கை கூட்டம் மட்டும் அல்லாமல் மத்திய பட்ஜெட்-க்குப் பின் நடக்கும் நாணய கொள்கை கூட்டம் என்பதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
பிப்ரவரி 8 ஆம் தேதி இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிக்க உள்ளார். இந்தச் சக்திகாந்த தாஸ் உரையில் கட்டாயம் அதானி குழுமம் மற்றும் இந்திய வங்கிகளின் அதானி குழும வெளிப்பாடுகளும் இடம்பெறும்.
ரிசர்வ் வங்கி
பிப்ரவரி 6-8 ஆம் தேதி வரையில் நடக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ராய்ட்டர்ஸின் கணித்துள்ளது.
மத்திய வங்கிகள்
இதேவேளையில் உலகின் முன்னணி மத்திய வங்கிகளைப் போலவே, ரிசர்வ் வங்கியும் வட்டி விகித உயர்வை இந்தக் கூட்டத்தில் நிறுத்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதுநாள் வரையில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வுக்கு முழுமையான பலன் கிடைத்த பின்பு வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்பு
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா பணவீக்கத்தில் சாதகமான முன்னேற்றம் அடைந்திருக்கும் வேளையிலும், பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாலும் வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்துவதற்குத் தளம் உள்ளது எனவும் கருத்து நிலவுகிறது.
சில்லறை பணவீக்கம்
டிசம்பர் 2022ல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியமான காரணம் உணவுப் பொருட்களின் விலை குறைவு தான்.
நுகர்வோர் விலைக் குறியீடு
நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்க விகிதம் டிசம்பரில் 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நவம்பரில் 5.88 சதவீதமாகவும், 2022 அக்டோபரில் 6.77 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்க வரம்பு இலக்கு
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க வரம்பு இலக்கான 4- 6 சதவீத அளவிற்குள் பணவீக்கம் வந்த நிலையில் ஜனவரி 2022 முதல் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அதிகளவில் நம்பப்படுகிறது.சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.88 சதவீதமாகவும், டிசம்பரில் 5.72 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
5 முறை ரெப்போ விகித உயர்வு
டிசம்பர் 2022 இல் நடந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக அறிவித்தது. இது 2022ல் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது ரெப்போ விகித உயர்வு ஆகும். RBI இன் விகித நிர்ணயக் குழு 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 225 அடிப்படைப் புள்ளிகள் ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது.