இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் நாணய கொள்கை முடிவுகளை இன்று அறிவிக்க உள்ளது. கடந்த சில நாணய கொள்கை கூட்டங்களில் அதிகளவிலான எதிர்பார்ப்பு இந்த நாணய கொள்கை முடிவுகளுக்கு உள்ளது.
முக்கியப் பிரச்சனைகள்
ரஷ்யா-உக்ரைன் மோதலால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டு உள்ளது, கச்சா எண்ணெய் விலை உயர்வின் பாதிப்புகள் ஆகியவற்றின் மூலம் அதிகரிக்க உள்ள பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட உள்ள பாதிப்பு எனப் பல விஷயங்களை இந்த நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் சந்தை வல்லுனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி
பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகத்தை இன்று வெளியாகும் நாணய கொள்கை முடிவுகள் கடுமையாகப் பாதிக்கும். எனவே நாணய கொள்கை முடிவுகளைப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் இன்று வெளியிடும் நாணய கொள்கை முடிவுகளில் நுகர்வோர் பணவீக்கத்தைத் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள 4.5 சதவீதத்தில் இருந்து உயர்த்தவும், ஜிடிபி வளர்ச்சி அளவீட்டை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள 7.8 சதவீதத்தில் இருந்து குறைத்து அறிவிக்கும் என்பது தெரிகிறது.
பாங்க் ஆப் அமெரிக்கா
பாங்க் ஆப் அமெரிக்கா 2023ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 5.5 சதவீதமாகவும், ரியல் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்த ஜிடிபி வளர்ச்சி கணிப்புக்கு முக்கியக் காரணம் இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றுமதி வர்த்தகம்.
சில்லறை பணவீக்கம்
பிப்ரவரி 2022 இல், இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 6.07 சதவீதமாக இருந்தது, இது 2022 ஜனவரியில் 6.01 சதவீதத்தில் இருந்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் சுமார் எட்டு மாத உயர்வை தொட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி பணவீக்கத்தின் அளவீடு வரம்பான 2.0-6.0 சதவீதத்தைத் தாண்டி இரண்டாவது முறையாக இந்த ஆண்டுப் பணவீக்கம் 6.0 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்கா டூ பாகிஸ்தான்
அனைத்திற்கும் மேலாக அமெரிக்கா-வை துவங்கி பாகிஸ்தான் வரையில் பல நாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், பல நாடுகள் வட்டியை உயர்த்தவும் தயாராக உள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துமா அல்லது தொடர்ந்து பழைய வட்டி விகிதத்தையே அறிவிக்குமா என்பது தான் தான் முக்கியக் கேள்வியாக உள்ளது.